செவ்வாய், 24 டிசம்பர், 2019

அக்னியில் ஞானஸ்நானம் - Baptize by fire

முதலில் யோவோன் நீரினால் திருமுழுக்கு ஞானஸ்நானம் அனைவருக்கும்
வழங்கினார். இன்று எல்லா சர்ச்சுகளிலும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது!
நீரில் மூழ்கி எழுவதா? அப்படியாயின் வல்லமை மிக்க ஏசு பெருமான்
தூய ஆவி என்னும் நெருப்பால் எப்படி  திருமுழுக்கு கொடுத்திருப்பார்?
நீர் ஆனதால் மூழ்கி விட்டீர்! தூய ஆவியாகின அக்னியில் மூழ்குவது எப்படி?

ஏசு பெருமான் யோவானை பணிந்து குருவாக ஏற்று அவரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்!  உத்தமர் ஏசுவின் இறைகுணம் அது!  தானும் அவ்வாறு ஞானஸ்நானம்
செய்விக்காமல் அக்னியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்!
எப்படி இது தான் மிகப்பெரிய ஞான ரகசியம்!
 

ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் நிலவ!
சனாதன தர்மம் - சன்மார்க்கம் உலகெங்கும் தழைக்க!
உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஏக இறைவன்!
அனைத்து மதங்களும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன்!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பேரொளி!!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்வீர்!
மரணமிலா பெருவாழ்வு பெறுவீர்!

ஒரு தீபம் மற்றொன்றை ஏற்றும்போது ஒளி
பெறுகிறது!


வள்ளலார் வழி நடப்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
என்பதை நிரூபிக்கும் விதமாக நாங்கள் இந்த இயேசு எழுபது
நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

தேவ மைந்தன்! ஒப்பற்ற ஞானி! வாழையடி வாழையாக உலகை
உய்விக்க வந்தமகான்! இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய
இறைத்தூதர்! அன்பால் உலகை வெல்ல வந்த அற்புதர்! அன்பால்
உலகை வெல்ல வந்த அற்புதர்! இயேசு பிரானின் மகிமை சொல்ல
வாய்ப்பளித்த எங்கள் வள்ளல் பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

-ஞான சற் குரு சிவசெல்வராஜ் 

www.vallalyaar.com

வியாழன், 12 டிசம்பர், 2019

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா"

 என மகாகவி பாரதியார் ஒளி உள்ள,
ஒளி உணர்வு உள்ள, ஒளியாகிய பரம்பொருளை அறிந்தவர்களை அறைகூவி அழைக்கிறார்!

நெஞ்சிலே உறுதியுடன் நேர்மை திறமும் கொண்டு விடுதலைக்காக பாடுபட வருக வருக என அழைக்கிறார்!

நாட்டு விடுதலைக்காக?! இல்லை?! நம் விடுதலைக்கு!
அறியாமை எனும் விலங்கு பூண்டு, மனம் எனும் அரக்கனுக்கு அடிமையாக கிடைக்கிறோம்!
விடுதலை பெற வேண்டாமா?

ஆன்மபலம் பெற்று ஒளியுடல் பெற விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ எந்த கட்டுக்குள்ளும் சிக்காது சுதந்திரமாக வாழ சித்தம்போல வாழ சிவமாகிய ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா!

ஞான சற்குருவை நாடி திருவடி தீட்சை பெற்று உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
ஆன்ம நேய உணர்வு பெறுவாய் மரணமிலா பெருவாழ்வு கிட்டும்!

இதுவே பாரதியின் அறைகூவல்!

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போலவே,
மகாகவி பாரதியாரும் மனதுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை
 உசுப்பி சித்தம் போக்கு சிவம் போக்கென சுதந்திரமாக வாழ வழிகாட்டினார்!!


ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திருவருட்பாமாலை
 நாலஞ்சாறு
பக்கம் : 71
குருவின் திருவடி சரணம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை


"தகுவிந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு
சக்தி வடிவாம் பொற்பதம்
தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தஞ்சத்தியாம் பொற்பதம்
சவிகற்பம் நிருவிகற்பம் பெறும் அனந்தமா
சக்தி சத்தாம் பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருள்
சத்தி உருவாம் பொற்பதம்"



தகுவிந்தை−தகும்+விந்து, தகுதியுடைய உலகபடைப்பின் ஆதாரமான சுத்த மாயையான விந்து சக்தி! ஒளி சக்தி!

மோகினியை−மோகத்தைதரும் மகா மாயையான சக்தி! நாத சக்தி! ஒலி சக்தி!அசுத்த மாயை
மானை மான் போன்ற மனதை−மும்மல காரணமான சக்தியை மாயையை பிரகிருதி மாயை!
அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை மூன்றையும் சேர்ப்பதே!
ஒரு சக்தி வடிவாம் பொற்பதம்−மும்மாயையும் சேர்ந்த ஒரு சக்தியாக உருப்பெற்றதே நம், திருவடியாகிய கண்கள்!

தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சக்தி−தாழ்வில்லாத குறைவேயில்லாத நிறைவான ஐந்து மூர்த்தங்களான ஈசானம்,தற்புருடம்,அகாரம்,வாமம், சத்தியோசாதம் என்ற ஐந்து சக்திகள்!
தம்சக்தியாம் பொற்பதம்−
இந்த ஐந்தும் சிவனின் பரிணாமங்களாகும்.
மாயை மூன்றும் சக்தி ஐந்தும் சேர்ந்ததே எட்டு! தம் சக்தியாகிய எட்டும் சேர்ந்தாலே திருவடி! சேர்ப்பதே தவம்! சேர்த்தாலே முக்தி

சவிகற்பம் நிருவிகற்பம் −எல்லா பொருட்களும் காணப்படுவையாகவும் அதாவது உருகொண்டும் உரு இல்லாமலும் துலங்குகிறது! பெறும் அனந்தமா சக்தி சத்தாம் பொற்பதம்−உரு அரு எல்லாம் பெறும் எல்லா சக்திகளுக்கும் சத்தாக இருக்கின்றது. பொன்னான திருவடியே!

தடநிருபவவிவர்த்த சாமர்த்திய−உருவ அருவ நிலைப்பாடுகளின் தனித்துவத்தை வெவ்வேறாக காட்டி விளக்கி நிற்கும்தன்மை!

திருவருட் சக்தி உருவாம் பொற்பதம்−இப்படி எல்லாவற்றையும் காட்டி நிற்பது இறைவனின் திருஅருளால் சக்தியால் ஒளி உருவாக அமைந்த நமது பொற்பதம்−திருவடி−கண்களே.

ஆன்மீகச்செம்மல் ஞானச்சித்தர் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை−மூன்றாம் பகுதி
பக்கம்:26−27

சனி, 17 ஆகஸ்ட், 2019

நல்ல மருந்து கண்மணி ஒளி!


"நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாதமருந்து "

நல்லமருந்து, நமக்கு பேரின்பம் அருளும்
ஜோதியே மருந்தாம்! அதுஒளியான வைத்தியர் அருளிய நாதமருந்து! ஒளியும் ஒலியுமான- விந்து நாதமான அருட்பெருஞ்ஜோதி மருந்து!

அருள்வடிவானமருந்து நம்முள்அற்புதமாகஅமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து அன்பர்க் கிங்குரு வாக இருந்தமருந்து

அருளே வடிவான இறைவன் ஒளி தங்கிய கண்ணே மருந்து! நம் முன்பாக கண்ணில் அற்புதமாக விளங்கும் மருந்து! இருளாகிய நம் அஞ்ஞானத்தை அகற்றும் மருந்து! அன்பர்களுக்கு- திருவடியை - கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்யும் அன்பர்களுக்கு மெய்யடியார்களுக்கு குருவாகும் மருந்து!

"சஞ்சலந் தீர்க்கும் மருந்து எங்குந் தானேதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி தானந்த மாக அமர்ந்த மருந்து "

அடியார்களின் மன சஞ்சலங்களை தீர்க்கும் மருந்து! உலககெங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஜோதி மருந்து! அஞ்சாதே என அடியார்களுக்கு அபயம் நல்கும் மருந்து! சத்து - சித்து ஆனந்தமாக விளங்கும் மருந்து! சத்தான ஒளியை தியானிக்க சித்துக்கள் கூடி வரும் பின் பேரானந்த நிலை கூடும்!

"பிறப்பை யொழிக்கும் மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து"

கண்மணி ஒளியான மருந்தை சாப்பிட்டால் இனி வினையகன்று பிறப்பு உண்டாகத நிலை கூடும்! வினையற்று ஞான சாதனை தொடரும் போது இறப்பும் இல்லமலாகி
சீரஞ்சீவியாக்கும் ஒளி!

"நானது வாகுமருந்து "

நான் ஆகிய ஆத்மா கர்ம வினைகளற்று பரமாத்மா நிலை கூட்டுவிக்கும் கண்மணிஒளி!

மலைப்பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து!

மலை பெண் - இடப்பாகம் இருக்கும் சக்தி! அதனுள் இடது கண் உள் சேரும் கலைகளின் முடிவில் அமுதமான பெரிய மருந்து! சந்திர கலையை ஊடுருவி சூரிய கலை சென்றபின் சந்திர கலையில் எஞ்சிய 4 கலை உள் அக்னி கலையுடன் சேர்ந்ததும் கிட்டும் அமுதம்! அதுவே பெரிய மருந்து அதை அருள்வது வாலை! தாய்! சக்தி!

தன்னை தேடுவோர் தங்களை நாடும் மருந்து

இறைவனை தேடி அலையும் அன்பர்களுக்கு இறைவனே யாரையாவது அனுப்பி, தூண்டி தன்னை அடைய வழிகாட்டுவார்! மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும்!

உள்ளே நோக்குகின்றறோர்களை நோக்கு மருந்து

இறைவனை புறத்திலே தேடுபவர் ஒரு நாளும் காணமாட்டார்கள்! இறைவன் நம் மெய்யினுள்ளேயும் இருக்கிறானல்லவா? நம் மெய்யிலே பொருளாக கண்மணி ஒளியாக இருப்பதை அறிந்து உணர்ந்து கண்மணி ஊசிமுனை துவாரத்தின்
உள்ஒளியாக விளங்கும் பரமனை உள்ளே பார்க்க வேண்டும்! நாம் உள்ளே
தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்! அவன் வடிவை ஒளியை நாம் காணலாம்.

என்னை வாழ்வித்த என் கண்மணியா மருந்து

நம்மை வாழவைப்பது - உயிரோடு இருப்பது, நம் கண்மணி உள் நின்றாடும் ஒளியால்தான்! நம் உயிரான இறைவன் துலங்குவதால் தான்! கண்மணி உள்ஒளியான நம் உயிர்தான் பரமாத்மாவின் அம்சம்!

நம்மை நாமறியும் படி நிண்ணு மருந்து

நாம் யார்? ஆத்மா? நாம் எங்கிருக்கிறோம்? நம் உயிர் ஆத்மா எங்கிருக்கிறது? என்பதனை அறிவித்து நான் யார் என்பதை தெளிவுபடுத்தும் மருந்து, அருட்பெருஞ்ஜோதி மருந்து, கண்மணி ஒளியான மருந்து! என்னை நான் உணர வைக்கும் மருந்து

பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட் பேராசை யெல்லாம் பிளக்கும் மருந்து மண்ணாசை தீர்க்கு மருந்து

நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய பெண்ணாசை, பொன் பொருளாசை, மண்ணாசையெல்லாம் போய்விடும் இறைவன் திருவடி மீது மாறாத அன்பு பெருகும்!

வரும் எல்லா பிணிக்கும் மிதுவே மருந்து

நமக்கு வருகின்ற எல்லா பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் இதுவே மருந்தாகும்! கண்மணி ஒளியே!

கண்ணொளி காட்டுமருந்து

நம் கண்மணியில் ஒளியாக கலந்து நின்று தன்னையே ஒளியையே தங்க ஜோதியாக காட்டும் மருந்து!

சின்மய ஜோதி மருந்து - அட்ட சித்திய முத்தியுஞ் சேர்க்கு மருந்து

சின்மயம் – கண், கண்மணி ஜோதி மருந்து! அதுவே அட்டமா சித்தியும் முக்திபேறும் அருளும்!


ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா

திருவருட் பிரகாச வள்ளலார் அருளியதிருவருட்பாமாலை

பக்கம் எண் 72

புதன், 31 ஜூலை, 2019

கண்காணியில்லென்று கள்ளம் பலசெய்வார்

  "கண்காணியில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"
                     பாடல் :2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்!

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?!

இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்து அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது!
நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே!

கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி - கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 164
ஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா
குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

வியாழன், 25 ஜூலை, 2019

57 . மருட்கை விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

57 . மருட்கை விண்ணப்பம்

யாது செய்குவன் போதுபோ கின்ற 
தண்ண லேஉம தன் பருக் கடியேன் 
கோது செய்யினும் பொருத்தருள் புரியும் 
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 
வண்கை யீர் என் கண்மணி அணையீரே 

மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.

மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால்  நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்   - பாடல் 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர்   வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை!  எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
எல்லா துன்பங்களும் நீங்க பெற்று வாழ்வாங்கு வாழலாம்

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா   

www.vallalyaar.com

புதன், 24 ஜூலை, 2019

அபிராமி பட்டர் - பெளர்ணமி

அபிராமி பட்டரை பொறுத்தவரை சதா  காலமும் தவத்தில் மூழ்கி திளைப்பவரல்லவா?

எப்போதும் ஒளிக் காட்சி தானே கண்டு கொண்டிருப்பார்?
இருளேது?அமாவாசை ஏது? என்றும் பெளர்ணமி தான் எப்போதும் பெளர்ணமி தான்!

ஒவ்வொரு ஆத்ம சாதகனுக்கும் என்றும் பெளர்ணமி தான்!
என்றும் பௌர்ணமியாகவே இருக்கும்படி எப்போதும் தவத்தில் மூழ்க
வேண்டும்!அனுபவம்!

இப்படி சதா சர்வகாலமும் பெளர்ணமியாகவே இருந்தால் வாலைகாட்சி கிட்டும்!
வாலை அருளால் அமிர்தரஸம் பெருகும்! நமக்கு கிட்டும்.

நம் உடலின் 72000 நாடிகளிலும் அது பாய்ந்து பரவும்! உயிருக்கு மேலும் உயிரூட்டுகிறது. சக்தியளிக்கிறது! இதைப் பருகினவன் பசிதாகம் அற்று காயசித்தியும் பெறுவான்.

ஞானம் பெறுவான் , மரணமிலா பெருவாழ்வும் பெறுவான்!இடகலையாம் -இடது கண்ணாம் -சந்திரனே - உ_சக்தியேயாகுமல்லவா? பெளர்ணமி தரிசனம் காண்!

"இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்" என்று விநாயகர் அகவலிலே ஒளவையார் குறிப்பிடுகிறார்!

இடை சக்கரம் இடை கலையான - இடது கண்ணான சக்கரமான வட்டமான சுழலும் கண்மணிதான் சந்திரன் அது ஈரெட்டு 16 கலைகளையுடையது !

முதலில் தாயின் பாதத்தைப் பிடி! தாயை சரணடை!பூரண சந்திரனாகு! பின்னரே ஞானம்! அம்பிகையை  பிடித்தால் தான், பெளர்ணமியில்தான் பிடிக்க முடியும்!?

அதனால் தான் பக்தியில் கோவிலில் பெளர்ணமி பூஜை! அம்பிகையின் தலையிலே ஒரு கலை சந்திரன் காட்சி தருகிறான்! பூரண சந்திர ஒளியில் தான் அம்பிகையை காணலாம்!!

ஞானசற்குரு
ஞானம் பெற விழி
பக்கம் எண் 93

www.vallalyaar.com

திங்கள், 22 ஜூலை, 2019

சீடனாகாதவன் தெளிவில்லாதவன்

"தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதவர் சீவனுமாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே"
                       பாடல்−1480
           
குருவிடம் உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குருஉபதேசம் தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்! அறிவில்லாதவர்! சீடனாகாதவன் தெளிவில்லாதவன் முட்டாள்! முட்டாள் எப்படி சிவனை இறைவனை அறிவான்?

இறைவனைப் பற்றிய தெளிவான கருத்து இல்லாதவன் எப்படி இறைவன் திருவடியை அறிவான்?! அறிந்தால் தானே தெளிந்தால் தானே, தான் தான் சீவன் அந்த சிவனின் அம்சம் என அறிவான்! சீவனான சிவனே நம் உள்ஒளி! ஒளியே சிவம்! என சிந்தை தெளியாதவன், குரு உபதேசம் பெறாதவன், சீடனாகாதவன் உணர மாட்டானே!

குரு உபதேசம் பெற்று சிந்தை தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம் உள்ஒளி என உணர்ந்தால்லவா பிறவிப் பிணிதீரும்! இந்த தெளிவில்லாதவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

மந்திரமணிமாலை
ஞான சற் குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

வியாழன், 4 ஜூலை, 2019

முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது

"முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா! "

                                    பாடல்−2041

நம் கண்மணி ஒளியை எண்ணி தியானம் செய்தால் முத்துப்போன்ற வெள்ளை ஒளியும் பின்னர் மரகதம் போன்ற பச்சை ஒளியும் காணலாம்! யாரால்? நம் கண்ணில் மணியில் கார்முகில் வண்ணனான ஒளியால் காணலாம்!
            இதேயனுபவத்தை எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலே சமாதி கொண்டருளும் ஞானக்கடல் பீர்முகமது அப்பா அவர்களும் தமது ஞானப்புகழ்ச்சியிலே 4−வது பாடலாக அருளுகிறார்!?

"முத்தொடு பவளம் பச்சை முதலொளி புவனும் கூட்டி சத்தியாய்ச் சிவனாயிந்தத் தாரணி தன்னிலாக்கிப் பத்தியாயெனை வளர்த்த பரமனே"

           என எவ்வளவு அருமையாக ஞான அனுபவ நிலையை பாடிவிட்டார்?! முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது ஒரே மெய்யனுபவ நிலைதான்!

            ஞானத்து−கடவுளையடைய தடையே நாம் கொண்ட மதம்தான்− ஆணவம் எனும் மதமே! யானைக்குத்தான் மதம் பிடிக்கும்! பிடித்தால் அனைத்தும் துவம்சம்தான்! நமக்கு மதம் வேண்டாமே? நாம் மனிதர்கள்! ஒரே கடவுளின் குழந்தைகள்!! இதுதான் சன்மார்க்கம்! சகலரும் சேர்ந்து வாழ்வதே!


 பரமபதம்
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

வெள்ளி, 31 மே, 2019

சும்மா இருக்கும் சுகம்

"இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற் றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல வெம்மாயை யற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் "

துன்றுமல வெம் மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம், கர்ம மலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயை மலம் ஆகியன இல்லாமலாகி வெளிக்குள் வெளி கடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது. அதுவே உன் வெளி! அந்த உள் வெளிக்குள் வெளி கடந்து! " சும்மா இருக்கும் சுகம் " _ நம் மும்மலங்கள் இல்லாமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போக வேண்டுமானால் " சும்மா இருக்கும் சுகம் " தெரிந்திருக்க வேண்டும்.



சும்மா இருந்தாலே- சுகம் பேரின்பம் கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்i!


நீங்கள் ஏதாவது செய்தால் ஏதாவது பலன் கிட்டும்! உங்கள்செயல் - வினை - அதற்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும் ! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்க்கின்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல், புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக் கொள்கிறான் மனிதன்.


அதற்குதான் ஞானிகள், எதையாவது செய்தால் ஏதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் " சும்மா இரு" என்கிறார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப் பெரிய ஞான நிலையாகும்!


இப்பணியில்தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருக்க ! வந்தால்! இன்றே கிட்டும்! நாளை வந்தால் நாளைக்கே கிட்டும்! நாளை, நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒருவாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?


ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய "திருவருட்பாமாலை " நூலில் பக்கம் எண் 13
www.vallalyaar.com

வியாழன், 30 மே, 2019

ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?

"உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டுவாழும் முதலைமேல் சீறிவந்தார்"

தேவர்களாலும் அறிய முடியாதவன் அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவன்! பரந்தாமன்!
பாற்கடல்வாசன்!

அந்த கருணைக்கடல், நதிக்கரையில் முதலை வாயில் அகப்பட்ட ஆனைக்காக,ஆதிமூலமே என்று ஶ்ரீமந்நாராயணரை கூவி அழைத்த கஜேந்திரனுக்காக ஓடோடி வந்து முதலையை சக்கராயுதத்தால் கொன்று இரட்சித்தானே!!

அந்த கருட வாகனனை கண்டு களிக்கும் நாள் எந்நாளோ?!

ஶ்ரீரங்கத்தின் அருகே திருவானைக்கா எனும் அப்புஸ்தலமான சிவ ஷேத்திரத்தில்,தினமும் காவிரி நீர் எடுத்து சிவனுக்கு துதிக்கையால் அபிஷேகம் செய்த ஆனைக்கு மோட்சம் அருளினான் சிவபெருமான்! அத்தலமே திரு ஆனைக்காவல் என்றாயிற்று! 

ஓரறிவு முதல் ஐயறிவுவரை எல்லா ஜீவராசிகளுமே இறையருள் பெற்றிருக்க, ஆறறிவு பெற்ற நாம் இறையருள் பெற வேண்டாமா? ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?

விதண்டா வாதம் புரியவும்,முட்டாள் தனமாக பேசுவதும், எல்லாம் தெரிந்தவன் போல் நடப்பதும் தான் ஆறறிவு இல்லாத இந்த மனித குலத்தின் மிகப்பெரிய பண்பு! முட்டாள்கள்!!

நாலாயிர திவ்ய பிரபந்தம் எழுதி வருகிறேன். குருவாயூர் குட்டி கிருஷ்ணன் கோயில் அரவணை பாயாசமும் அமுத பஞ்சாரையும் அன்பர் ஒருவர் கொண்டு வந்தார்! சாரதா ஆஸ்ரமத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நடக்கிறது வாருங்கள் என அழைப்பு வந்தது! ஶ்ரீமத் நாராயணன் அருள் கிட்டுகிறது!    நாராயணா! நாராயணா!

பரமபதம்
  பாடல்−899
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

வியாழன், 9 மே, 2019

மும்மலத்தில் பெரியது மாயை!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்!





அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் உலகெங்கும் தாயின் கட்டளையை நிறைவேற்றும்
சேவகர்கள்!

மிகப்பெரிய இரகசியம் இது!

சித்தர் சொன்ன இரகசியம்!

ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்ட அந்த அரனுக்கு இவளே எல்லாமாம்!

ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்!

சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் 
உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால்\ மகளுமாவாள்!

ஆஹா அற்புதம்!

எவ்வளவு பெரிய உண்மை ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக
பூதகணங்கள் உள்ளன!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!

"நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர் முருகப்
பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!

வீரபாகு முதலானவர்கள்!

முருகனின் கணங்கள் தான் முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவப்படுத்தி ஞானப்பாதைக்கு அழைத்துச் செல்வர்!




தாயே வாலையே என மகாமாயையை பணிந்தால் அரவணைப்பாள்!

மும்மலத்தில் பெரியது மாயை!

எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!

 தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

 உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமிபட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்ததுபோல!

பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததைப் போல!

இன்னும் சொல்லிக் கொண்ட போகலாம் அன்னையின் மகிமையை!

அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!?

இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல!?

எம்மைப் பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!

வாலைதான்!

கன்னி'ய'குமரி பகவதி அன்னை சரணம்! சரணம்! சரணம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 109
குருவின் திருவடி சரணம்

தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி....

மனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை துடுப்பாக யூன்றி
சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு
சம்சார சாகரத்திலே பெருங்கடலிலே போகும் போது
காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்!

நம் காயக்கப்பல்! ஏன் இந்த அவலம்!

எத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது!

நம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்
பெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை)
நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்!

தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்!

எப்படி? யாரால்?

நம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி!

மாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்!

எந்த கரை? இறைவன் இருக்கும் அக்கரையிலே!

*அக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேரமுடியும்!*

மாலுமியை நம்பு! பிறவிப் பெருங்கடல் கடக்கலாம்!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் : 102
குருவின் திருவடி சரணம்

உஞ்சைவிருத்தி

“நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே"

                        பாடல் - 1888

சதா சர்வ காலமும் இறைவனையே நினைந்து நினைந்து தவம் செய்யும் மெய்யடியார்கள் சாப்பாட்டைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்!

ஒரு ஜாண் வயிற்றை நிரப்ப ஆகாரம் தேடி அதற்காக சம்பாதிக்க போகமாட்டார்கள்!

தேவையெனில் பிச்சை எடுப்பர்! அது நான் என்னும் ஆணவத்தை விட்டொழிக்கும்!

உண்மையான சன்னியாசியின் இலட்சணமே "உஞ்சைவிருத்தி” தான்! அதாவது பசித்தால் புசிக்க பிச்சை எடுத்து உண்பான் அவனே உண்மையான சந்நியாசி!

"இருக்கும் இடம் தேடி என் பசிக்கு உருக்கமுடன் உணவு கொண்டு வந்தால் உண்பேன் அல்லது உண்ணேன்" என பட்டினத்தார் கூறினார்.

பட்டினத்தார் சீடர் பத்திரகிரியார் பிச்சையெடுத்து குருவுக்கு கொடுத்து மீந்ததை தான் சாப்பிட்டு மோட்சம் பெற்றார்!

அந்த பரமனே பிரம்ம கபாலத்திலே பிச்சையெடுத்துத்தான் உண்டார்!

அந்த பரமன் போட்ட பிச்சைதானே நம் உயிர்! மறக்கலாமா?

ஆணவம் அழிய வேண்டுமானால் நீயும் பிச்சையெடு! உயிர்பிச்சை போட்டவனை 
அப்போதுதான் உணர முடியும்!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : மந்திர மணி மாலை

பக்கம் : 158

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

திங்கள், 22 ஏப்ரல், 2019

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்






ஶ்ரீ இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்!!

ஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர!! இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.! ஆஞ்சநேயர்!!

சிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.!

இன்றும் வாழ்கிறார்! கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.!

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்! பரமபதம் போக வழி காட்டுவார்!!

கண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான்! கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான்! காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.

ஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா.

நூல்:பரமபதம்
பக்கம்:91

www.vallalyaar.com

நம் காயக்கப்பல்!

மனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை துடுப்பாக யூன்றி சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு சம்சார சாகரத்திலே
பெருங்கடலிலே போகும் போது காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்!

நம் காயக்கப்பல்!

ஏன் இந்த அவலம்!

எத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது!

நம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்
பெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை) நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்!

தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்!

எப்படி? யாரால்?

நம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி!

மாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்!

எந்த கரை?

இறைவன் இருக்கும் அக்கரையிலே!

அக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேர முடியும்!

மாலுமியை நம்பு!

பிறவிப் பெருங்கடல் கடக்கலாம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 102

குருவின் திருவடி சரணம்

மூலிகை-யோகம்-பட்டினி-சூட்சுமம்

உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்!

விட்டதடி ஆசை புளியம்பழத்தோட்டோடு என்பர்!

நாம் உடலை வெறுக்க வேண்டாம்!

உயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்!

உடல் பக்குவமாகிவிடும்!

இது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.

இது மாபெறும் தவறு!

பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்!

தவறு!

உடலை புண்ணாக்காதீர்!

உயிரை போற்றுங்கள்!

இன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்!

வெறும் உடலை வைத்து என்ன செய்ய!

இதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்!

"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

                    - திருமூலர்

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!

அ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்!

இதுவே மதியாகும்!

ஆன்மீகசெம்மல் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : திரு மணி வாசக மாலை

பக்கம் : 107

குருவின் திருவடி சரணம்

சனி, 23 மார்ச், 2019

திருவடியை பற்றினால் திருமுடி

இந்த உலகில் உள்ள சுடர் எல்லாம் நாம் ஏற்றி வைக்கும் தீபங்கள்!
தூண்டி கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் அணைந்து விடும்!

ஆனால் நம் சிர நடுவுள் விளங்கும் விளக்கு தூண்டா விளக்கு! எப்போதும்
ஒளிவிட்டு பிரகாசிக்கும் விளக்கு!

அதன் சுடரே நம் இரு கண்களில்
துலங்குகிறது.

 கண்களில் துலங்குவதே இறைவன் திருவடி என்கின்றனர்
ஞானிகள்!

திருவடியை பற்றினால் திருமுடி நம்மை தேடி தாழ்ந்து வந்து
அருள்புரிந்து நம்மை நம்மை தூக்கி காத்து அருள்புரியும்!

அடியை பிடித்தால்
முடி வந்துவிடும்! அடிபணி பரமன் அருள் கிட்டும்! 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா  

செவ்வாய், 5 மார்ச், 2019

குரு அஷ்டகம்

குரு அஷ்டகம்

உங்களுக்கு வலுவான உடல் இருந்தும்
அழகான மனைவி இருந்தும்
உலகத்தில் புகழ் பெற்று இருந்தாலும்
பணம் அதிகமாக இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


நீங்கள் மிக பெரிய குடும்பத்தில் பிறந்து
மனைவி குழந்தைகள் உறவினர்கள்
பேர செல்வங்கள்
கதித்தோங்கும் செல்வம் இருந்தும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


அனைத்து ரிக் யஜுர் அதர்வண சாம
 வேதங்களையும் விரல் நுனியில்
வைத்து இருந்தாலும் இலக்கியங்களில்
புலமை பெற்று இருந்தாலும், பாடல்கள்
எழுதும் புலமை பெற்று இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

நீங்கள் நியமனவர் என்றும்  , உங்கள் நடத்தைக்கும்,
 உங்கள் உயர்ந்த பண்புக்கும் வெளிநாடுகளிலும் ,
உங்கள் சுற்றத்திலும்  மிகுந்த மரியாதை உள்ளது. 
உங்களை விட சிறந்தவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்றாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


நாட்டை ஆளும் மன்னனாக இருந்து உலகமே உங்கள் காலடியில்
இருந்தாலும், உனக்காக சேவை செய்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

தருமம் ஈகை  குணத்தால் உங்கள் புகழ் உலகம் முழுதும் பரவி இருந்து
உங்களால் பெற முடியாதது உலகத்தில் இல்லை என்றாலும் 
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

உங்கள் மனதில் உலகியல் மனைவி குடும்பம் பணம்
மற்றும் சொத்து மேல்  பற்று மேல் இல்லாமல் இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


ஆதி சங்கரர்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

சத்விசாரம் செய்வது எப்படி? – வள்ளலார்


சுத்தசன்மாக்க சாதனங்களாக வள்ளல் பெருமான் நமக்கு கூறுவது இரண்டு.

அவைகள்:   பரோபகாரம்,
                       சத்விசாரம்.

அதில் "சத்விசாரமாக"  வள்ளலார் கூறுவதை பற்றி இக்கட்டுரையில் பார்போம்.

'' சத்விசாரம்'' செய்கிறேன் என்று பல வள்ளலார் பக்தர்கள் இணைய தளத்திலும், நேரிலும் விவாதம் செய்து கொண்டுள்ளனர்.

சிலரோ விஞ்ஞானத்தினைக் கொண்டு விளக்கம் கூற முயல்கின்றனர்.

ஆனால், இதையா வள்ளல் பெருமான் "சத்விசாரம்" என்றார்🤔?

ஆன்ம அறிவினால் தான் கடவுளை அறிய முடியும் என்றும் ஆண்டவர் தான் நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார்.

அதனால் வெறும் புத்தகத்தினை படிப்பதாலோ அல்லது விவாதம் புரிவதாலோ எக்காலத்திலும் உண்மையினை அறிய முடியாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஏனெனில் மேற்கூறிய முறைகள்  நமது அந்தகரனங்களான மனம் , புத்தியை கொண்டு தெரிந்து கொள்ள முற்படுவது.

அதனால் மேற்குறிய யாவும் சத்விசாரம் அல்ல.!

சத்விசரமாக வள்ளல் பெருமான் கூறுவது இதையே:

“சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது.”

வள்ளல் பெருமான் மேல் கூறி உள்ள வரிகளை இன்னொரு முறை படித்து நினைவில் வைத்து கொண்டு அடுத்து படிக்கத் தொடருங்கள்.

சத்விசாரம் என்னவென்று பேருபதேசத்திலும்,உரைநடை பகுதியிலும்
வள்ளல் பெருமானே மேலும் விளக்கி உள்ளார்.

சத்விசாரம் = சத் + வி + சாரம். சத் (அ) சத்தியம் . நமது உடலில் சத்தியம் ஆக , அழியாததாக விளங்குவது நமது ஆன்மா.

வி – விலக்குதல் / நீக்குதல். சாரம் – துன்பம் / துக்கம்.

அதாவது சத்விசாரம் எனில் நமது ஆன்மாவினது துக்கத்தினை நீக்குதல் என்று பொருள் படும்.

ஆன்மாவிருக்கு உள்ள துக்கத்தினை நிவர்த்தி செய்து கொள்வது தான் சத்விசாரம். ஆன்மாவிருக்கு துக்கம் எதனால் உண்டாகிறது? ஆன்மாவிருக்கு துன்பம் (அ) குறை அதை பற்றியுள்ள அதன் திரைகளே என்கிறார் வள்ளலார்.

ஆன்மாவிற்கு துன்பம் தரும் இத்திரைகளை நீக்க நாம் செய்யும் நன் முயற்சியே சத்விசாரம் ஆகும்.

இம்முயற்சியாக வள்ளல் பெருமான் கூறுவது நமது திரையை நீக்க எந்நேரமும் இடைவிடாது தெய்வத்தினை  நினைத்தும் , ஸ்தோத்திரித்தும் நமது குறையை ஊன்றியும் வருவதே.

தெய்வத்தின் புகழ் பாடுதல் , நமது சிறுமையினை நினைத்தல் இவைகள் நமக்கு மன நெகிழ்ச்சியை உண்டாக்கும். (மன நெகிழ்ச்சியே பக்தி.)  பணிவினை கொடுக்கும்.

ஆகா சத்விசாரத்திற்கு நமக்கு முதலில் வேண்டியது" பக்தியும், பணிவும்" . 

அடுத்து குறையினை கடவுள் "திருவடி" யில் விண்ணப்பியுங்கள் என்கிறார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் கடவுளிடம் விண்ணபிக்க சொல்ல வில்லை.

கடவுள் திருவடியில் விண்ணபிக்க  சொல்கிறார்.

குறை என்பது நமது ஆன்மாவினை பற்றி உள்ள திரைகள் என்று அறிந்தோம்.

அடுத்து கடவுள் திருவடி என்பது எது?

எவ்வாறு விண்ணப்பிப்பது என்று அறிய வேண்டும் அல்லவா?

இந்த  திருவடியினை போற்றி  “திருவடி புகழ்ச்சியில்” பல நூறு பாடல்களை பாடி உள்ளார் வள்ளல் பெருமான்💪.

திருவடி என்பது நமது கண்கள் தான் என்பதை எங்கள் இணைய தளம் முழுவதும் எல்லா ஞானிகளின் பாடல்களை கொண்டு ஆதாரத்தோடு விளக்கம் அளித்துஉள்ளோம்.

“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய் , காட்டும் ஒளிதனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூனும் திருவடிகள்” – திருவருட்பா

கண்ணாகவும், கண்மணி ஒளியாகவும் , அந்த ஒளிக்கு ஒளி தரும் ஒளியாகவும் இறைவன் திருவடிகள் விளங்குகிறது என்பதே இதன் பொருள்👍.

சூட்சுமமாக கண்ணில் துலங்கும் ஒளியில் தான் நமது வினை திரை அழிந்து இல்லாமல் போகும். அதனால் தான் இறைவன் திருவடியில் விண்ணபியுங்கள் என்கிறார் வள்ளல் பெருமான்.

இறைவன் திருவடியில் விண்ணப்பிபது எவ்வாறு?

பேருபதேசத்தில் சுத்த அதியுஷ்ணத்தினால் தான் திரைகள் நீங்கும் என்று கூறி உள்ளார்கள்.
இறைவன் திருவடியே இந்த சுத்த அதியுஷ்ணத்தினை உண்டு பண்ண முடியும்.

ஆக கண்மணியில் கண்மணி ஒளியினை கொண்டு உஷ்ணத்தினை  உண்டு பண்ணுதலே கடவுள் திருவடியில் சமர்பித்தல் / விண்ணபித்தல் ஆகும்.

கடவுள் திருவடியில் (அ) கண்மணி ஒளியினால் ஏற்படும் உஷ்ணம்  அதனால் இது சுத்த உஷ்ணம் எனப்படும்.


சாதாரண மனிதர்களுக்கு கண்மணியில் ஒளி இருப்பினும் ஏன் இந்த உஷ்ணம் ஏற்படுவது இல்லை?

ஏனெனில் நம்முள் உள்ள இறைவன் செயல் படாமல் நம் வினை செயல்படுவதால் தான்.

இறைவன் தான்  செயல்படமால் சாட்சியாக இருந்து வினை வழியே நம்மை ஆட்டுவிப்பதினால்.

நமது கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு ஒரு துவாரம் இருக்கிறது. இதில் தான் நமது ஆன்ம ஒளி துலங்குகிறது. சூட்சமமாக உள்ள இந்த ஆன்ம ஒளியினை சூட்சுமமான வினை திரைகள் மறைத்து உள்ளன.

வள்ளல் பெருமான் போன்ற ஞானி ஒருவரது ஒளியினால் வினை திரைகள் துளைக்கப்பட்டு, நமது கண்மணி ஒளி தூண்டப்பட வேண்டும். அப்போது தான் நம் உள் இருக்கும் இறைவன் செயல் பட ஆரம்பிபார்.

இதை தான் “குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை” என்கிறார்கள்.

சரி எவ்வாறு நாம் வள்ளல்பெருமானின் ஒளியை பெறுவது?!. 

அருட்பெரும் ஜோதி ஆகி உள்ள வள்ளல் பெருமானை நாம் நேரடியாக  பெறவோ (அ) காணவோ இயலாது . அதனால் மனித உருவில் உள்ள குருவின் மூலமே வள்ளலார் நம்முள் பிரவேசிப்பார்.

நமக்கு உயிர் தந்தது எல்லாம் வல்ல இறைவன் தான் ஆனால் தாய் தந்தையின் மூலம் தானே இந்த நாம் உலகத்தில் பிரவேசித்தோம். அது போலவே நம்முள் வள்ளல் பெருமானை பெற மனித உருவில் ஒரு குரு வேண்டும்.

வள்ளல் பெருமான் நம்முள் வர காரணமாக உள்ளவரை தான் ஞான சற்குரு என்கிறோம்.

அதனால் தான் பல இடங்களில் வள்ளல் பெருமான் குருவினை பெறுங்கள் என்று கூறி உள்ளார்கள்.

இந்நிகழ்வினை  தான் திருவடி தீட்சை என்பர்.

தீட்சை என்றால் மலம் ஒழித்தல் என்றும்,
தீ + அட்ச்சை என்று பொருள்.

இறைவனை (கண்மணி ஒளியை) செயல்படாமல் செய்யும் மலத்தினை நீக்குதல் தான் தீட்சை.

அதாவது நமது கண்ணில் சுத்த உஷ்ணத்தினை பெற நாம் நம்முள் வள்ளலாரை பெறுவதே தீட்சை.

வள்ளலார் தான் என் குரு என்று கூறுபவர்கள் அவர் சூட்சுமாக உங்களுக்குள் பிரவேசிக்க இப்போது ஒரு ஞானசற்குருவை பெற்றேயாக வேண்டும்.

தகுந்த ஆச்சாரியர் மூலம் உங்கள் நடுக்கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் - திருவருட்பா!

இவ்வாறு நமது கண்ணில் பெரும் உஷ்ணத்தில் (உணர்வில்) வள்ளல் பெருமானின் துணை கொண்டு நாம் ஒன்றுவதே சத்விசாரம் ஆகும்.

இது தான் திருவடி தவம் ஆகும். பக்தியோடு செய்யும் இந்த திருவடி  தவத்தின் மூலம் தான் யோகிகள் காட்டிற்கு சென்று செய்யும் தவத்தினை விட அதிக உஷ்ணம் பெற முடியும் என்கிறார் வள்ளல் பெருமான்.

இறைவன் திருவடியில் நமது மனதினை எப்போதும் வைத்து இருப்பது தான் சும்மா இருத்தல் ஆகும்.

இந்த சத்விசாரம் தொடர தொடர நமது திரைகள் சிறிது சிறிதாக நீங்கும்.    ஆண்டவர் வெளிபடுவார். நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார். பெறவேண்டியதை பெற்றுகொள்ளலாம்.

இதுவே சுத்த சன்மார்க்கத்தின் சாதனம். இதை விடுத்து வெறும் விவாதம் புரிவதாலோ அல்லது விஞ்ஞானம் பேசுவதாலோஒரு பயனும் இல்லை.

இவைகளால் மனம் அதிகம் செயல் பட்டு திரையின் கடினத்தினை தான் அதிகப்படுத்தும்.

நயன தீட்சை பெற்று தவம் செய்க
கண் தவம் (உணர்வோடு இரு ) செய்க
விழித்திரு!


 --->பார்க்க Www.vallalyaar.com

👁👁

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

ஓடிக்கொண்டிருக்கும் மனதை இறைவன் திருவடியில்....

கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில் பொன்னை புதைத்து வைக்க முடியுமா?

ஆற்றிலே வெள்ளம் இல்லாத போது பொன் புதைப்பவனும் முட்டாளே!

ஆற்றங்கரையில், அமைதியான இடத்திலேதான் எதையும் வைத்து பயன்பெற இயலும்.

நம் வினைகளால் மனம் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கின்றது. கடல் அலைபோல சலித்துக் கொண்டே இருப்பதுதான் நம் மனம்!

அப்படிப்பட்ட மனதில் எப்படி இறைவனை  எண்ண முடியும்.?
உணர்வது? மனமானது வினை உள்ளளவும் இருக்கும்!
செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்!

ஆற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட முடியாது.! நிற்கவும் முடியாது!

அதன் போக்கிலேயே போய் கரையேற வேண்டியதுதான்! ஓடிக்கொண்டிருக்கும் மனதை  இறைவன் திருவடியில் ஓடச்செய்வதே புத்திசாலித்தனம்.

நம் கண்மணியில் மனதை நிறுத்தி பழக பழக ஓடும் பொல்லாத மனம் ஒருநாள் அடங்கும்.

வேகம் குறைந்து இறைவன் திருவடியாகிய நம் கண்மணி ஒளியில் நின்று விடும்!

குருமூலம் கண்மணியில் உணர்வை தீட்சை பெற்றவன் பழகி பழகி தவம்செய்து உணர்வை பெருக்கி ஒளியை பெருக்கி மனதை இல்லாமலாக்கிவிடுவான்? எத்துன்பமும் வராது காப்பாற்றப்படுவான்!



ஞானசற்குரு திருசிவ  செல்வராஜ் ஐயா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை இரண்டாம் பகுதி
பக்கம்:22

www.vallalyaar.com

திங்கள், 28 ஜனவரி, 2019

போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள்

பொய் சமயங்கள் போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள் கூறும் யோகம் தவம் கர்மம் எல்லாம் ஒவ்வாத சாத்திரமாம்.

ஒத்துப் போகாது ஏன்?

அதில் உண்மை இருக்காது!

அப்படி போலியான உண்மையில்லாதவர்களை நாடினால் அவர்களை சவலைப் பிள்ளைகளை போன்று, போஷாக்கில்லாத தாய்ப்பால் அருந்தாமல் முழுவளர்ச்சியடையாத நோஞ்சான் பிள்ளையை போன்றவர்கள்!

உண்மை தெரியாமல் தடுமாறுவர்!

ஆனால், இறைவன் திருவடியை தம் கண்ணை உணர்ந்து தவம் செய்வோர் கவலை தீர்த்து ஆட்கொள்வான் அந்த இறைவனே!

அவன் புகழ்பாடி தெள்ளேணம் கொட்டாமோ - நம் கண்ணில் ஒளியாக நிலைநின்று அருளும் நாதனை நம் இரு கண் ஒளியை சேர்த்து தவம் செய்து பேரின்பம் பெருவோமாக என்கிறார். நம் மாணிக்கவாசக பெருமான்!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : திரு மணி வாசக மாலை

பக்கம் : 72

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

திங்கள், 14 ஜனவரி, 2019

போகி பண்டிகை - நம் உடலில்

நம் உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை அழுக்கே நிரம்பியிருக்கிறது!

மல ஜலம் மட்டுமல்ல தலை உச்சியில் கோழை கண்ணில் பீழை மூக்கில் களி காதில் அழுக்கு வாயில் எச்சில் தொண்டையில் நெஞ்சில் கபம் உடலெல்லாம் வியர்வை கைகால் நகங்களில் அழுக்கு இப்படி அழுக்கு மூட்டையே நம் உடம்பு!

தினமும் குளித்து புற உடலை தூய்மையாக்கினால் மட்டும் போதாது!

நல்ல ஆகாரத்தால் கூடுமானவரை எந்த அழுக்கும் வராமல் காக்கலாம்!

ஒரு சில மருந்து மூலிகைகாளால் இன்னும் ஓரளவு காக்கலாம்!

உடலில் எந்த அழுக்கும் வராமல் சேராமல் காக்க ஒரே வழி ஞான தவம்!

கண்ணை விழித்திருந்து தவம் செய்தால் ஏற்படும் சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் பரவி எல்லா அழுக்கையும் வெளியேற்றுகிறது!?

ஜன்ம ஜன்மாந்திரமாயுள்ள மும்மல அழுக்கையும் வெளியேற்றி நம் உடலை தூய்மையாக்கும்!

மலம் இல்லாத விமலன் இறைவன் நகர் நம் சிர நடு உள்போ!

தூய்மையாகு!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 65

குருவின் திருவடி சரணம்

சனி, 12 ஜனவரி, 2019

பூ - தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து

அத்தேவர் தேவர் அவரதேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிக் புலம்புகின்ற புதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற
மெய்த்தேவர் - திருக்கூத்தும்பி



அந்த தேவர் - கடவுள்! அந்த தேவதை தான் கடவுள், என
உண்மையறியாமையால் தெய்வம் எது? தேவதை எது என்ற
விவரமில்லாமல் கண்ட கண்ட கோவிலை தேவதையை கொண்டாடும் உலகர்!
தான் சொல்வது தான், இந்த தெய்வம் தான், இதுதான் தெய்வம் என்று
பொய் பல பேசி புலம்புகின்றார்கள் இன்றும்!?

பூதலத்தே - உலகிலே! ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகு ஆதலால் பூதலம் என்றார் மாணிக்கவாசகர்! இப்படிப்பட்ட உலகிலே எந்த பற்றும் இல்லாமல் எனை தடுத்து காத்து , இறைவனை அறியாத எனக்கு தன்னை அறிவித்து நான் வேறு பற்றின்றி அந்த இறைவனையே பற்றிட அருள்புரிந்தான் மெய்த்தேவன்!

இறைவன்! சிவம்! என் கண்ணிலே குடிகொண்ட ஒரே மெய்த்தேவன்! நம் தேவன் நம் மெய்ப்பொருளிளே உள்ள ஒளியே! வேறு தெய்வமில்லை! திருவடியை பணி !

பூ - தலத்திலே - பூ போன்ற கண்மலராகிய தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து என் மெய்யிலே
உள்ள தேவராகிய உன்னை நான் பற்ற, பூதலத்தில் பற்றியுள்ள என் மும்மலப் பற்றை அறுத்த
இறைவா! உலகுக்கு நீ ஒருவனே தேவன்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Popular Posts