ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை


"தகுவிந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு
சக்தி வடிவாம் பொற்பதம்
தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தஞ்சத்தியாம் பொற்பதம்
சவிகற்பம் நிருவிகற்பம் பெறும் அனந்தமா
சக்தி சத்தாம் பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருள்
சத்தி உருவாம் பொற்பதம்"



தகுவிந்தை−தகும்+விந்து, தகுதியுடைய உலகபடைப்பின் ஆதாரமான சுத்த மாயையான விந்து சக்தி! ஒளி சக்தி!

மோகினியை−மோகத்தைதரும் மகா மாயையான சக்தி! நாத சக்தி! ஒலி சக்தி!அசுத்த மாயை
மானை மான் போன்ற மனதை−மும்மல காரணமான சக்தியை மாயையை பிரகிருதி மாயை!
அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை மூன்றையும் சேர்ப்பதே!
ஒரு சக்தி வடிவாம் பொற்பதம்−மும்மாயையும் சேர்ந்த ஒரு சக்தியாக உருப்பெற்றதே நம், திருவடியாகிய கண்கள்!

தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சக்தி−தாழ்வில்லாத குறைவேயில்லாத நிறைவான ஐந்து மூர்த்தங்களான ஈசானம்,தற்புருடம்,அகாரம்,வாமம், சத்தியோசாதம் என்ற ஐந்து சக்திகள்!
தம்சக்தியாம் பொற்பதம்−
இந்த ஐந்தும் சிவனின் பரிணாமங்களாகும்.
மாயை மூன்றும் சக்தி ஐந்தும் சேர்ந்ததே எட்டு! தம் சக்தியாகிய எட்டும் சேர்ந்தாலே திருவடி! சேர்ப்பதே தவம்! சேர்த்தாலே முக்தி

சவிகற்பம் நிருவிகற்பம் −எல்லா பொருட்களும் காணப்படுவையாகவும் அதாவது உருகொண்டும் உரு இல்லாமலும் துலங்குகிறது! பெறும் அனந்தமா சக்தி சத்தாம் பொற்பதம்−உரு அரு எல்லாம் பெறும் எல்லா சக்திகளுக்கும் சத்தாக இருக்கின்றது. பொன்னான திருவடியே!

தடநிருபவவிவர்த்த சாமர்த்திய−உருவ அருவ நிலைப்பாடுகளின் தனித்துவத்தை வெவ்வேறாக காட்டி விளக்கி நிற்கும்தன்மை!

திருவருட் சக்தி உருவாம் பொற்பதம்−இப்படி எல்லாவற்றையும் காட்டி நிற்பது இறைவனின் திருஅருளால் சக்தியால் ஒளி உருவாக அமைந்த நமது பொற்பதம்−திருவடி−கண்களே.

ஆன்மீகச்செம்மல் ஞானச்சித்தர் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை−மூன்றாம் பகுதி
பக்கம்:26−27

சனி, 17 ஆகஸ்ட், 2019

நல்ல மருந்து கண்மணி ஒளி!


"நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாதமருந்து "

நல்லமருந்து, நமக்கு பேரின்பம் அருளும்
ஜோதியே மருந்தாம்! அதுஒளியான வைத்தியர் அருளிய நாதமருந்து! ஒளியும் ஒலியுமான- விந்து நாதமான அருட்பெருஞ்ஜோதி மருந்து!

அருள்வடிவானமருந்து நம்முள்அற்புதமாகஅமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து அன்பர்க் கிங்குரு வாக இருந்தமருந்து

அருளே வடிவான இறைவன் ஒளி தங்கிய கண்ணே மருந்து! நம் முன்பாக கண்ணில் அற்புதமாக விளங்கும் மருந்து! இருளாகிய நம் அஞ்ஞானத்தை அகற்றும் மருந்து! அன்பர்களுக்கு- திருவடியை - கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்யும் அன்பர்களுக்கு மெய்யடியார்களுக்கு குருவாகும் மருந்து!

"சஞ்சலந் தீர்க்கும் மருந்து எங்குந் தானேதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி தானந்த மாக அமர்ந்த மருந்து "

அடியார்களின் மன சஞ்சலங்களை தீர்க்கும் மருந்து! உலககெங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஜோதி மருந்து! அஞ்சாதே என அடியார்களுக்கு அபயம் நல்கும் மருந்து! சத்து - சித்து ஆனந்தமாக விளங்கும் மருந்து! சத்தான ஒளியை தியானிக்க சித்துக்கள் கூடி வரும் பின் பேரானந்த நிலை கூடும்!

"பிறப்பை யொழிக்கும் மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து"

கண்மணி ஒளியான மருந்தை சாப்பிட்டால் இனி வினையகன்று பிறப்பு உண்டாகத நிலை கூடும்! வினையற்று ஞான சாதனை தொடரும் போது இறப்பும் இல்லமலாகி
சீரஞ்சீவியாக்கும் ஒளி!

"நானது வாகுமருந்து "

நான் ஆகிய ஆத்மா கர்ம வினைகளற்று பரமாத்மா நிலை கூட்டுவிக்கும் கண்மணிஒளி!

மலைப்பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து!

மலை பெண் - இடப்பாகம் இருக்கும் சக்தி! அதனுள் இடது கண் உள் சேரும் கலைகளின் முடிவில் அமுதமான பெரிய மருந்து! சந்திர கலையை ஊடுருவி சூரிய கலை சென்றபின் சந்திர கலையில் எஞ்சிய 4 கலை உள் அக்னி கலையுடன் சேர்ந்ததும் கிட்டும் அமுதம்! அதுவே பெரிய மருந்து அதை அருள்வது வாலை! தாய்! சக்தி!

தன்னை தேடுவோர் தங்களை நாடும் மருந்து

இறைவனை தேடி அலையும் அன்பர்களுக்கு இறைவனே யாரையாவது அனுப்பி, தூண்டி தன்னை அடைய வழிகாட்டுவார்! மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும்!

உள்ளே நோக்குகின்றறோர்களை நோக்கு மருந்து

இறைவனை புறத்திலே தேடுபவர் ஒரு நாளும் காணமாட்டார்கள்! இறைவன் நம் மெய்யினுள்ளேயும் இருக்கிறானல்லவா? நம் மெய்யிலே பொருளாக கண்மணி ஒளியாக இருப்பதை அறிந்து உணர்ந்து கண்மணி ஊசிமுனை துவாரத்தின்
உள்ஒளியாக விளங்கும் பரமனை உள்ளே பார்க்க வேண்டும்! நாம் உள்ளே
தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்! அவன் வடிவை ஒளியை நாம் காணலாம்.

என்னை வாழ்வித்த என் கண்மணியா மருந்து

நம்மை வாழவைப்பது - உயிரோடு இருப்பது, நம் கண்மணி உள் நின்றாடும் ஒளியால்தான்! நம் உயிரான இறைவன் துலங்குவதால் தான்! கண்மணி உள்ஒளியான நம் உயிர்தான் பரமாத்மாவின் அம்சம்!

நம்மை நாமறியும் படி நிண்ணு மருந்து

நாம் யார்? ஆத்மா? நாம் எங்கிருக்கிறோம்? நம் உயிர் ஆத்மா எங்கிருக்கிறது? என்பதனை அறிவித்து நான் யார் என்பதை தெளிவுபடுத்தும் மருந்து, அருட்பெருஞ்ஜோதி மருந்து, கண்மணி ஒளியான மருந்து! என்னை நான் உணர வைக்கும் மருந்து

பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட் பேராசை யெல்லாம் பிளக்கும் மருந்து மண்ணாசை தீர்க்கு மருந்து

நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய பெண்ணாசை, பொன் பொருளாசை, மண்ணாசையெல்லாம் போய்விடும் இறைவன் திருவடி மீது மாறாத அன்பு பெருகும்!

வரும் எல்லா பிணிக்கும் மிதுவே மருந்து

நமக்கு வருகின்ற எல்லா பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் இதுவே மருந்தாகும்! கண்மணி ஒளியே!

கண்ணொளி காட்டுமருந்து

நம் கண்மணியில் ஒளியாக கலந்து நின்று தன்னையே ஒளியையே தங்க ஜோதியாக காட்டும் மருந்து!

சின்மய ஜோதி மருந்து - அட்ட சித்திய முத்தியுஞ் சேர்க்கு மருந்து

சின்மயம் – கண், கண்மணி ஜோதி மருந்து! அதுவே அட்டமா சித்தியும் முக்திபேறும் அருளும்!


ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா

திருவருட் பிரகாச வள்ளலார் அருளியதிருவருட்பாமாலை

பக்கம் எண் 72

Popular Posts