நான் யார்? நான்-ஆத்மா ! நான் ஏன் பிறந்தேன்? என் பாப புண்ணிய வினைகளுக்கு முடிவு கட்ட
இறைவன் கருணையினால் பிறப்பிக்கப்பட்டேன் ! நான் எப்படி பிறந்தேன் ? ஏன் தாயும் தந்தையும்
சுரோணித சுக்கிலத்தால் பிண்ட உற்பத்திக்கு மட்டும் காரணமாக, என் இரு வினைகளுக்கு
தகுந்த படி ஆத்மாவை மாயையால் பொதிந்து, பிண்டத்துக்கு உள் இறைவன் செலுத்தியதால்
உயிரோடு உடலோடு பிறந்தேன்.
இந்த உடலில் இந்த உயிர் எங்கு இருக்கிறது ? அதாவது ஆத்மாவின் இருப்பிடம் யாது ?
அதாவது ஜீவன் எங்கு இருக்கிறது ? எப்படி இருக்கிறது?
இந்த ஒரு கேள்விக்கு விடை தெரிந்தால் அவன் ஞானி !
இந்த கேள்வியின் விடையை அறிந்து, உணர்ந்தால் அவன் சித்தன் !!
இந்த கேள்வியின் விடையை அறிந்து, உணர்ந்து அனுபூதியடைபவனே தெய்வமாகிறான் !!!
தான் அதுவாகிறான் .
தன்னுள் குடிகொண்டிருக்கும் தெய்வத்தை உணர்ந்து, அதுவாகவே மாறுபவன் - தன்
இருவினைகளையும் இல்லாமலாக்குகிறான் - மாந்தருள் தெய்வமாகிறான்! பஞ்ச பூதத்தால்
ஆன தூல உடல் ஒளியுடலாக விளங்க பெறுகிறான்!
இப்படிப்பட்ட ஒரு மகோன்னத நிலையடைந்தவர் தான், கடந்த நூற்றாண்டிலே தமிழகத்திலே வடலூரிலே உலாவந்தவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்கள் .
63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் அகத்தியர் முதலான எண்ணிறந்த சித்தர் பெருமக்களும் இன்னும் பற்பல ஞானிகளும் மகான்களும் இந்த மகோன்னத நிலையடைந்துள்ளனர் .
நமது புண்ணிய பூமியாம், ஞான பூமியாம் இந்தியாவில் இது போல் ஒப்பற்ற உயர்ந்த ஞான நிலையடைந்த மகான்கள் ஏராளம்! ஏராளம்!!
இந்த புண்ணிய பூமியிலே நம்மை பிறப்பித்தமைக்கு முதலில் நாம் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னிலை உணர இறைவன் அருள் பாலிக்கிறான் .
அவரவர் கொண்ட வினைக்கு தக்கவாறு, செயலுக்கு தக்கவாறு உயரவோ தாழவோ செய்கிறான் .
நாம் நம்மை உணர வேண்டும் - ஆத்மானுபூதி பெற வேண்டும். அதுவே நமது பிறவிப்பயன் .
சிந்தித்து - தெளிந்து - உணர்வு பெறுக !
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்