திங்கள், 17 ஆகஸ்ட், 2026

15. திருத்தோணோக்கம்

 15. திருத்தோணோக்கம்

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்

உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே

பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருவாசக மெய்ஞ்ஞான உரை எழுத ஆரம்பித்த பின் அடியேன் மேலும் மேலும் பற்பல ஞான விளக்கங்களை உணர முடிகிறது! எல்லா ஞானிகளின் பாடல்களுமே, ஊன்றி கவனித்தாலே மெய்ப்பொருளை உணர்த்தும்!

 கற்றது கைமண்ணளவு என்பது உண்மையிலும் உண்மை! இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்நூல் எழுதும்போது அறிந்து கொண்டேன்! இறைவன் எண்குணத்தான் என எல்லோரும் கூறுவர்! எட்டாக இருப்பவன் என்பர் பரிபாஷையாக எண்ணிலும் எழுத்திலும் ‘அ’வாக எட்டாக இருக்கிறான் - வலது கண் சிவம் என்பதும் பரிபாஷைகள்! இரு கண்ணும் 8 போல் infinity போல் இருக்கிறது என்பது சிந்தித்து கண்ட உண்மை! உன் மெய்யிலுள்ள கண் என ‘கண்’டதால் சொன்னது!! 

இங்கே மாணிக்கவாசக பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், உயிர், சந்திரன், சூரியன் என்ற எட்டும் சேர்ந்த இரு கண்களே என அழகாக தெளிவாக நமக்கு கூறுகிறார்! எட்டும் சேர்ந்திருப்பவன், எட்டிலே இருப்பவன் என்றனர்! ஐம்புலன்களாய் அமைந்தோன்! எட்டு வகையாய் சேர்ந்தும் நின்றான்! உலகம் ஏழு என நின்றான்! ஆறு ஆதாரமும் ஏழாவது சகஸ்ரதளமும் சேர்ந்து ஏழு உலகு என்றனர்! திசை பத்து எண்திசையும் மேலுலகு கீழுலகு என திசை பத்தாகவும் இறைவன் நின்றான்! யார் அவன்? ஒருவனே இவ்வாறு பலவாக திரிந்து நின்றான் அவனே பரம்பொருள் பரமாத்மா நம் கண்ணானவன்! இறைவன்! அவனை கண்டு மகிழ்ந்து பாடியாாடுங்கள்! கண்டால் கண்-டால் அடிப்படை காணலாம்! கண்டவர் விண்டிலர்! கண்டவர் பேச முடியாது பேராநந்தத்தில் மூழ்கி திளைப்பதால் பேச்சு வராது! பரவசமாகி மெய் மறந்து போவார்!! எப்படி பேச்சு வரும்! திகைத்து நிற்பர்! எண்குணன்! - எட்டிலே! - ‘அ’விலே! இரு கண் ஒளியாக! சிவமாக சக்தியாக 

அ-உ ஆக துலங்குகிறான்! ஆஹா எவ்வளவு பெரிய உண்மை! ஞானம்! இரகசியம்! அடியேன் அறிய அறிவித்த இறைவா என் மணியே மணிவாசகம் சொன்ன மாணிக்கவாசக பெருமானே என் குருமணியே வள்ளலே உலகுக்கு மெய்ஞ்ஞான உரை எழுதி தெரிவிக்க வைத்தவரே எப்படி நான் நன்றி சொல்வேன்! என்ன கைம்மாறு செய்வேன்! நீங்கள் இட்ட கட்டளைப்படி என்றும் உலகுக்கு மெய்ஞ்ஞானத்தை எவ்விதமாவது சொல்லிக் கொண்டேயிருப்பேன்!

“புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ”

புத்தன் முதலாய புல்லறிவாளர்களால் உருவான பல சமயங்களும் கடவுளை உணராமல் வாத பேசியே மெய்ஞ்ஞானம் இன்றி தாம் சொல்லும் மத சமய கருத்துக்களிலேயே தடுமாற்றம் கொண்டவராய் இருக்கின்றனர்! முரட்டு பிடிவாதம் கொண்டவராய் உடலை வருத்தி கொடிய விரதங்களை மேற்கொண்டும் உண்மையறியாமல் மடிந்து போகின்றனர்! “நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்” என மகாகவி பாரதியும் பாடுவதை கவனிக்கவும்! மாண்டவர் மீண்டும் பிறப்பர்! 

அப்படியாயின் அவர் பூரண நிலையடையவில்லை என்றுதானே பொருள்! பூரணத்தை - ஒளியை அறிந்தாலல்லவா மோட்சம்! அன்பை போதித்த புத்தன் தன் ஜீவன் மேல் அன்பு வைக்க - கருணை காட்ட தவறிவிட்டார்!?

 “ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்”! என்றாரே வள்ளலார்! தன் ஜீவனை காக்க, கண் ஒளியை பெருக்கி தவம் அல்லவா செய்ய வேண்டும்! கண்ணை மூடாமல் விழித்திருந்து தவம் - விழிப்புணர்வுடன் - விழியில் உணர்வுடன் தவம் செய்தாலே கிட்டும் மோட்சம்! முக்தி!

 சமண மதத்துறவிகளை வாதில் வென்று திருஞானசம்பந்தர் சைவநெறியை இறைநெறியை நிலைநாட்டினார்! புத்தமத துறவியை வாதில் வென்று அவரை சைவ சமயத்தை தழுவச் செய்தார் மாணிக்கவாசகபெருமான்! சமண மதத்திலே ஈடுபட்டு கொண்டிருந்த திருநாவுக்கரசரை இறைவனே ஆட்கொண்டு சைவநெறியில் ஈடுபட வைத்தார். இப்படி இறைவனே நல்ல நெறியை அடியார்களுக்கு போதித்து இங்கே நிலவும் சநாதனதர்மத்தை எல்லோரும் கடைபிடித்து ஒழுக அருள்பாலித்தார்! 

இந்தியாவில் தோன்றிய இந்த மதங்களெல்லாம் காணாமல் போய் சநாதன தர்மம் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறது. பிற நாட்டிலிருந்து வந்த கிருத்துவ இஸ்லாம் மதமும் இங்கே வளரமுடியாது போயிற்று! பாரத தேசத்தில் விளங்கும் சநாதன தர்மம் சாதி மத இன மொழிபேத மற்ற சமத்துவ சன்மார்க்க நெறியுடையது! அதனால் எத்தனை மதம்

மார்க்கம் வந்தாலும் தோன்றினாலும் இந்த தர்மம் சநாதன தர்மம் அழியாது என்றும் நிலைத்து நிற்கும்! இதில் தான் உண்மை இருக்கிறது! உண்மைக்கு சத்தியத்திற்கு என்றுமே அழிவில்லை! 

சநாதன தர்மம் சைவ உணவு உட்கொள்ள சொல்கிறது! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது! மனிதன் மனிதனாக வாழ்ந்து ஆன்மநேய ஒருமைப்பாடுடையவனாக உயர்ந்து முடிவில் மரணமடையாமல் இறைவனடி சேர வேண்டும் என்கிறது!

 வேறு எல்லா மதமும் பிறந்தவன் இறப்பான் என்றே கூறுகிறது?! ஒப்புயர்வற்ற அறிவுப்பூர்வமான தெளிவான ஞானகருத்துக்களை கொண்டதே இங்கே விளங்கும் சநாதன தர்மம்! இனி வருங்காலத்தில் உலகெங்கும் சநாதன தர்மமே விளங்கும்! இன்றைய உலகில் நடைபெறும் கஷ்டங்கள் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது! கொஞ்சம் கொஞ்சமாக உலகமே சைவ உணவு பழக்கத்திற்கும் சன்மார்க்க நெறிக்கும் மாறி வருகிறது! 

மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்! மக்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும்! யாரும் யாரையும் தன் மதத்துக்கு வருக என இழுக்காதீர்கள்! அவரவர் ஒழுக்கமாக நல்லநெறியாக பஞ்சமாபாதகம் புரியாமல் உலகமக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக கருதி ஒற்றுமையுடன் வாழ்ந்தாலே போதும்! 

இறைவன் ஒருவரே! ஒளியே கடவுள்! உன் கண்ணே திருவடி! உன் ஆன்மாவை இறைவனோடு சேர்ப்பாயாக! வாழு! வாழ்வாங்கு வாழ்க! நலமெல்லாம் பெற்று வாழ்க! சித்தத்தில் சிவனை இருத்தி ஞானதவம் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வர்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர்! பின் இறைவனடி சேர்வர்! இது சத்தியம்!

 அப்படி வாழும் ஞானதவ சீலர்கள் செய்வது எல்லாமே தவமாகும்! அவர் சொல்வது எல்லாமே மந்திரமாகும்! “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பிய சூத்திரம்!

 ஞானதவம் செய்வோரோ நிறைவான மனிதர் அவர் சொல்வதே வேதம் மந்திரம்! அப்படிப்பட்டவர் நல்லதுதான் செய்வார். நல்லதுதான் செய்வார் சந்தேகமில்லை! இறைவன் அருளால் கருணையால் ஞானதவம் செய்வோர் ஞானியாவார் இறைவனடி சேர்வர்! அந்த இறைவனை கண்டு பாடி ஆடுக! ஒப்புயர்வற்ற உயர்ந்த உன்னதமான வாழ்க்கைநெறியான சநாதனதர்மம் இங்கே விளங்கும்போது வேறு எந்த மதமும் மார்க்கமும் சமயமும் இங்கே துலங்கவில்லை! கொல்லன் தெருவில் ஊசி விற்க வந்த கதைதான் பிற மதத்தவர் நிலை! 

நமக்கு மதம் இல்லை - ஆணவம் இல்லை! வாழ்க்கை நெறியே உள்ளது! நமக்கு ஜாதி மதம் இனம் மொழி முதலிய எந்த வேறுபாடும் வேண்டாம்! நாம் மனிதர்கள் அவ்வளவுதான்! நமக்குள் இரண்டே பிரிவுதான் ஒன்று ஆண், இன்னொன்று பெண்! வேறெதுவும் வேண்டாம்! நாமனைவரும் எல்லாம்வல்ல இறைவனின் பிள்ளைகளே!

“பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்

தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே

சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு

எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ”

திருமால் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவனை அர்ச்சிக்கும் போது ஒரு பூ குறைந்ததாம்! உடனே தன் கண்ணை பிடுங்கி மலராக சிவன் பாதத்தில் இட்டாராம்! மகிழ்ந்த சிவன் மாலுக்கு சக்கராயுதத்தை வழங்கினாராம்! இப்படிப்பட்ட சிவன் மகிமையை எங்கும் கூறி பாடியாடி மகிழ்வோம் நாமே!

“பிரமன் அரியென்று இருவருந்தம் பேதைமையால்

பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க

அரணார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருமாலும் பிரம்மனும் நான்தான் பெரியவன் நான் தான் பெரியவன் என்று வாதம் புரிந்து கொண்டிருக்கையில், மிகப்பெரிய ஜோதியாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி உயர்ந்து நின்றான் சிவபெருமான்! முடியை தேடி அன்னமாக பிரம்மனும், அடியை தேடி பன்றியாக திருமாலும் போயினர் போயினர் போய்க்கொண்டேயிருந்தனர். முடியும் அடியும் காணாமல் சோர்ந்து திரும்பினர்! சிவமே உயர்ந்தது என்று ஒப்புக்கொண்டனர்!


www.tamil.vallalyaar.com 

Popular Posts