பிராரத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராரத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥



நூல் : சநாதனதர்மம் 3

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥

இந்த உலகில் பிறக்கும் நாம் அனைவரும் மனிதன் என்ற நிலையில் ஒரு குலம்.
ஆனால் 700 கோடி மக்கள் உள்ள இந்த உலகில் குணத்தால் 700 கோடி விதமாக இருக்கிறோம்.
உடல் ஒரே மாதிரிதான் !
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் !

பின் ஏன் இந்த வேறுபாடு ? எதனால் ? எப்படி ?
இதற்கு விடை இந்திய ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் பிறக்கிறது, அவன் இந்த பெற்றோருக்கு பிறப்பது இந்த ஊரில், இந்த சூழலில் என எல்லாம் நிர்ணயிக்கிறது ஒரு சக்தி !

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி பிறவி அமைகிறது.
பிறப்பை தீர்மானிக்கின்ற அந்த மாபெரும் ஒப்பற்ற சக்தியே உயிரை கொடுக்கின்றது !
பிறப்புக்கு காரணம் கர்மவினை !
எத்தனை பிறவி எடுத்தோமோ ?
எவ்வளவு பாவ, புண்ணியம் செய்தோமோ ?

இதை அறிய, பிறப்பைப் பற்றி நாம் அறிய, பிறப்புக்கு காரணமான வினையோடு உயிரை கொடுத்த இறைவனிடம் கேட்க வேண்டும்.

வினைகளோடுதான் பிறப்பு !?
வினைக்கு தகுந்தபடிதான் பிறப்பு !
யாருமே இதற்கு விதிவிலக்கல்ல !


" வினைபோகமே ஒரு தேகங்கண்டாய்
தினை போதும் நில்லென்றால் நில்லாய்"
என ஞானிகள் அழகாக கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும்போது நாம் கொண்டு வருவது நாம் முற்பிறவிகளில் செய்த கர்மத்தில் ஒரு பகுதியே !


1. பிறப்பில் வரும் கர்மம் பிராப்தம் - பிராரத்துவம் என்பதாகும்.
2. பிறந்து நாம் செய்வது ஆகாமியம் !
3. பிறப்பில் வந்த பிராரத்துவம் போக மீதி இருப்பதே சஞ்சித கர்மம் !
ஆக மூன்றுவிதம்.

இந்த கர்ம வினைகளில் பிராரத்துவமே எல்லா பிறப்பிலும் எல்லோருக்கும் வருவது.

அதாவது நாம் பல பிறவிகளில் செய்த பாவம் கொஞ்சம், புண்ணியம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து இறைவன் நாம் பிறக்கும்போது உயிரோடு இணைத்து, சூட்சும நிலையில் வைத்து பிறப்பிக்க வைக்கிறார்.


உயிர் பிண்டத்தில் வரும்போது தான் கர்மவினையும் கூடவே வருகிறது.
பிண்ட உற்பத்தியில் முதன் முதலாக உருவாகும் உறுப்பில்தான் உயிர் சேர்கிறது !
இதுவே ஞானிகள் கண்டறிந்த உண்மை !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

🔥 வினைகளை அழிக்கும் வழி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 22

"பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமே"

என்று தானே சித்தர் பெருமகனார் கூறியுள்ளார் !

இதுதானே உண்மை !

நாம் பிறக்கும்போது நம் உயிரோடு இறைவன் சேர்த்து அனுப்பியது பிராரத்துவம் !

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.

பிராரத்துவம் விதி ஆகாமியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ, அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம், அல்லது பாவம் நிறைய செய்து தீவினை கூடலாம். இப்படி ஏதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான் !

ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே !

ஆக, பிறக்கும்போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த உயிரோடு போய் விடுகிறது !!

பிறக்கும்போது வந்ததைவிட கூடவோ குறையவோ செய்யலாம் !

இந்த இடம்தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது !

விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதையெதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல் ?! எதையெதையோ செய்யாமல், விதியிலிருந்து வினையிலிருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால் !!

வினைகளை அழித்துவிட்டால் !!
சாகாமல் இருக்கலாமல்லவா ?!

வினையிருந்தால் தானே சாவு !

வினையிருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?!

வினைகளை இல்லாமல் செய்து விட்டால் ?!

பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ?

இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

இதுவே நல்வழி ! சிறந்த வழி ! ஒப்பற்ற வழி !

புத்திசாலித்தனமான வழி !

உலக ஞானிகள் அனைவரும் கூறியருளிய வழி !

ஞானவழி !

விழி வழி ! விழி ! விழி ! என விழிக்கும் வழி !

மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும் ! நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி, உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கிறது !

ஞான சற்குருவால் உபதேசம் தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால்,

நமது உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை - ஜவ்வை - திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம் !!

முடியும் ! எல்லோராலும் முடியும் !

இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை !

"முயற்சிஉடையார் இகழ்ச்சியடையார்"

உங்களுக்கு ஞானம் அருள, வினைநீக்க வள்ளல் பெருமான் உதவ காத்திருக்கிறார் !!

"வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூவி உலகரை அழைக்கிறார் ! வாருங்கள் தங்க ஜோதி ஞான சபைக்கு ! கன்னியாகுமரிக்கு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

சனி, 27 ஆகஸ்ட், 2022

🔥 மெய்ப்பொருளை - அறிந்தால் மட்டும் போதுமா? 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 16

இறைவன் படைத்து விட்டுவிட்டான் நம்மை இந்த உலகிலே ! 

         பிறப்பைப் பற்றி ஞானிகள் கூறுவது யாதெனில், ஒரு ஆத்மா, அது பற்பல பிறவிகளில் செய்த வினைகளின் ஒரு பகுதியை கொண்டு இறைவனால் பிறப்பிக்கச் செய்யப்படுகிறது. 

      விதிக்கப்பட்ட அளவு வினையுடன் "பிராரத்துவம்" பிறக்கிறது. இந்த ஊரில் இன்னாருக்கு இன்னநிலையில் பிறக்க வேண்டும் என அந்த இறைவன் தான் தீர்மானிக்கிறான் ! அந்தபடியே வந்து பிறக்கிறான் மனிதன் !

மனிதன் தன்னைப் பற்றி ஏதுமறியாமலே வளர்கிறான் ! வாழ்கிறான் ! காலம் போகிறது. காலன் வரநேரம் பார்க்கிறான். அப்போதைக்கப்போது நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன் என இறைவன் நம்முள் இருந்து வெளிப்பட்டு வெளிப்பட்டு தன்னை அறிய உணர மனிதனை தூண்டுகிறான் ! இதுதான் இறைவனின் பேரருட் செயல் ! 

இறைவன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் மனிதன் ஒருபோதும் இறைவனை அறியமாட்டான் !!

பூர்வஜென்ம புண்ணியம் இருந்து, இறைவன் அருளால் இறைவனை அறிய உணர முற்படுகிறான் மனிதர்களில் சிலரே ! 

பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம் என சரியை கிரியை யோகத்தில் அலைந்து திரிந்து புண்ணியம் இருந்தால் முடிவில் சற்குருவை அடைகிறான் ! 

ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான் ! 

மெய்ப்பொருளை சுட்டி உணர்த்துபவரே ஞானசற்குரு ! மெய்குரு !!

மெய்ப்பொருளை அறிந்தால் மட்டும் போதாது ! 

ஞான சற்குரு மூலம் ஞான தீட்சை பெறவேண்டும் ! 

ஞான தீட்சை பெற்றவனே ஆத்ம சாதகன் ! சித்தர்களும் ஞானிகளும் உரைத்த ஞானபாதையில் நடப்பவன் அவனே !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வியாழன், 25 ஜூலை, 2019

57 . மருட்கை விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

57 . மருட்கை விண்ணப்பம்

யாது செய்குவன் போதுபோ கின்ற 
தண்ண லேஉம தன் பருக் கடியேன் 
கோது செய்யினும் பொருத்தருள் புரியும் 
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 
வண்கை யீர் என் கண்மணி அணையீரே 

மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.

மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால்  நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்   - பாடல் 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர்   வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை!  எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
எல்லா துன்பங்களும் நீங்க பெற்று வாழ்வாங்கு வாழலாம்

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா   

www.vallalyaar.com

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வினை கழிந்து தன்னை உணர வழி ?


"வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்"

நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே!

இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்!

"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்"  என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்!

வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம்.

குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில்

கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக
வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து
காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து

தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக

சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து

போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts