சனி, 22 ஜனவரி, 2022

🔥 வள்ளலாரின் ஞானோபதேசம்🔥

 கண்மணிமாலை நூலிலிருந்து : 117 

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் உள்ளது திருவருட்பா. ஆறாம் திருமறையில் 63-ஆவது பதிகம் "ஞானோபதேசம்" எனும் பகுதியிலுள்ள 10 பாடல்கள். ஒவ்வொரு ஆத்ம சாதகனும் ஆராய்ந்து அறிய வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று இதுவாகும்.

 கண்ணே கண்மணியே எனத்தொடங்கி எனக்கு உண்மை உரைத்தருளே என முடிக்கிறார் வள்ளலார்.


" கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி

கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே 

தொண்டே திரு அம்பலந் தனக் காக்கிச் சுக அமுதம் 

உண்டேன் உயிர் தழைத் தோங்குகின்றேன் உள் உவப்புறவே" 

     - திருவருட்பா 4687


" கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி 

உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் 

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப் 

பற்றேன் சிவானந்தப் பற்றே என்பற்றெனப் பற்றினனே"

     - திருவருட்பா 4745


“ ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க 

ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப் 

பொருட் பெருஞ்சோதிப் பொதுவில் விளங்கும்

அருட்பெருஞ்ஜோதி அது"

      - திருவருட்பா 4823


" அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே 

ஆனந்தத் தெள்ளமு துண்டேனே 

இருட்பெரு மாயையை விண்டேனே 

 எல்லாம் செய் சித்தியை கொண்டேனே "

      - திருவருட்பா 5116


"கையற விலாது நடுக்கண் புருவப் பூட்டு 

கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு 

ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு 

ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு"

     - திருவருட்பா 5258


"பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்த்தே இறைவன் எனை 

உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானோம் 

எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன்னமுதம் 

துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே" 

     - திருவருட்பா 5486


" கண்ணிற் கலந்தான் கருத்தில் கலந்தான் என் 

எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் 

கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில் 

கலந்தான் கருணை கலந்து"

     - திருவருட்பா 5487


" ஒளி ஒன்றே அண்டபகிரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்றது " 

      - திருவருட்பா 5697


"கற்பூரம் மணக்கின்றது என் உடம்புமுழுதும் 

கணவர் திருமேனியில் கலந்த மணம் அதுதான்"

      - திருவருட்பா 5723


"எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் 

இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் 

மெய்ப் பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன்"

      - திருவருட்பா 5803


   மெய்ப் பொருளாம் - சிவம் - ஒளி - ஒன்றே உலகெங்கும் உள்ளது என உணர்ந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியை கண்களில் கண்டார். 


   அங்கே கற்றதே சிற்றம்பலக் கல்வி - சாகாக் கல்வி என்றார். அதனால் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் பெற்றார். தன் ஊன உடலே ஒளி உடலாக ஓங்கப் பெற்றார். 


   அந்நிலையில் அவர் மேனியிலே கற்பூரவாசம் வீசியது. இது இறைவன் அவரோடு கலந்து வெளிப்பட்டு நின்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறது.


 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 

www.vallalyaar.com

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

🔥 திருஅருட்பா ஓர் ஆன்மிக புரட்சியே 🔥

 திருவருட்பா பாத்திரத்தில் சிறந்தது என்பது அடியேன் கருத்து. 'பா' திறத்தில் மிகமிகச் சிறந்தது இது. சுமார் 6000 பாடல்களைப் பாடிய வள்ளலார் எந்தப் புலவரிடமும் பயிலாதவர், அருட்கவி. கற்க வேண்டியவைகளை இறைவனிடமே கற்றார். 

எல்லாவித இலக்கண நெறிக்கு உட்பட்டதும் - மிக மிக உயர்ந்த நடையை உடையதுமாகும். இலக்கணம் படித்தவர் இதனை கண்டு வியப்பர் ! சாதாரண மனிதன் இப்படி எழுத முடியுமா ? 

திருவருட்பா எல்லா ஞானிகளின் கருத்துச் சாறு என்றால் திருவருட்பாவின் ஞானரசம் வள்ளலாரால் அருட்பெருஞ் ஜோதி அகவலில் திரட்டப்பட்டுள்ளது !  இதனை படித்து வியக்காத பண்டிதனே கிடையாது !  இனி சொல்வதற்கு வேறொன்றுமேயில்லை எல்லாம் இந்த அருட்பெருஞ் ஜோதி அகவல் ஒன்றிலேயே உள்ளது. 

      இப்படி 'பா' வாகிய பாடல்களின் திறத்தில் மிகமிக உயர்ந்தது திருவருட்பா என்றால் அது மிகையாகாது. அடுத்து திருவருட்பா "பாத்திரத்தில் சிறந்ததாகும்." 

          அதாவது - பாத்திரம்-இறைவன் நம் உடலில் காரியப்பட்டுள்ள சற்பாத்திரத்தின் திறனை நயம்பட உரைத்தப்பாங்கு, பாத்திரத்தின் இடம், தன்மை, செயல்படும் விதம், முடிவு எல்லாம் விளங்கக் கூறுவதால் 

        - இது பாத்திரத்தின் சிறப்பை விளங்க வைப்பதால் பாத்திரத்திலும் சிறந்தது என்றாகிறது. 

இப்படி 'பா' திறத்தாலும், பாத்திரத்தை உணர்த்தும் பான்மையாலும் மிகச் சிறந்தது திருவருட்பா என்றால் அது யாராலும் மறுக்க முடியாததாகும். எனவே பாத்திரத்தில் சிறந்தது திருவருட்பாவேயாகும்.

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்!

 இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்!!

ஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர!! இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.! ஆஞ்சநேயர்!!

சிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.!

இன்றும் வாழ்கிறார்! கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.!

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்!

பரமபதம் போக வழி காட்டுவார்!!


கண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான்!

கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான்!

காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா! 

நூல்:பரமபதம். பக்கம்:91. 

www.vallalyaar.com

Popular Posts