சனி, 10 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 11

உனக்கே
நானும் உரைத்தேன்
உணர்ந்ததை உள்ளபடியே உவந்தே

உவந்தே
வாழலாம் அனைவரும்
ஊக்கமுடன் பற்றுவீர் பரமனை

பரமனை
பார்த்தல் பசிதீரும்
பாவம் போகும் புண்ணியமே

புண்ணியமே
நல்லோர் இணக்கமே
பாரத நாட்டில் பிறந்ததுவே

பிறந்ததுவே
பிறக்காமல் இருக்கவே
அறிந்து உணர்ந்து உய்வீரே

உய்வீரே
நீரும் பாரும்
முயல்வீர் வெற்றி நிச்சயம்

நிச்சயம்
இருந்தால் வெல்லலாம்
நீர் மேல் நெருப்பை சேரலாம்

சேரலாம்
சீவன் சிவனுடம்
சித்தியும் முத்தியும் தருவானே

தருவானே
சகல சம்பத்தும்
சர்வ வல்லமையும் சடுதியில்

சடுதியில்
வருவான் தருவான்
சகல கலை ஞானமே

ஞானமுமே
பெற்ற பின்னரே
போற்றுமே இந்த உலகம்.


வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 10

அற்றிடும்
உலக விவகாரம்
உற்றிடும் வீடு பேறு

பேறு
பெறுவதற்கு அறியது
மானிடப் பிறவி இதற்கே

இதற்கே
பாடுபட்டனர் ஞானியர்
நாமும் படுவோம் பாடு

பாடு
ஆடு தேடு
நாடு ஓடு உள்ளே

உள்ளே
கண்மணி மத்திவழி
புகுந்தால் மனத்தால் முப்பாழே

முப்பாழே
தாண்டி சென்றாலே
திருநடனம் காணலாம் மகிழ்ந்தே

மகிழ்ந்தே
மற்றவர்கள் அறியவே
மகிமை சொல்லி இன்புறுவாயே

இன்புறுவாயே
இருப்பதை பகிர்ந்தே
ஏற்றமிகும் மாற்றம் உனக்கே


புதன், 7 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 9


முதலே
ஆதியுநீ அந்தமுநீ
அறிந்தேன் குருவாலே ஆதரியே

ஆதரியே
ஆதரவு அற்றவரை
பசிக்கு உணவளி ஒளியளி

ஒளியளி
உலகம் உய்யட்டுமே
போற்றும் உன்னையே என்றும்

என்றும்
சிவன் சிந்தையே
வேண்டும் மணியை கருதே

கருதே
ஒளியை ஒலியை
நாத முடிவில் நல்லாளே

நல்லாளே
சக்தியாம் சிவம்பாதி
அருளாலே பெறலாம் சிவத்தை

சிவத்தை
சிந்தையில் இருத்தியே
அவன் அருளாலே வணங்கி

வணங்கி
பெற்றோர் குருவை
மூர்த்தி தலம் தீர்த்தம்

தீர்த்தம்
அமுதம் கிட்டும்
பசி தாகம் அற்றிடும்

அற்றிடும்
உலக விவகாரம்
உற்றிடும் வீடு பேறு

பேறு
பெறுவதற்கு அறியது
மானிடப் பிறவி இதற்கே

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பக்குவம் இல்லை

நீச்சல் கற்றுக்கொண்டு குளத்தில் இறங்கலாம் என்றால்
முடியவே முடியாது. முதலில் குளத்தில் குதி தையத்தக்க
என கையையும் காலையும் ஆட்டி அசைத்து நீச்சல் கற்று விடலாம்!

எனக்கு  பக்குவம் இல்லை பக்குவம் வந்த பின் தீட்சை
பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்பவனும் இது போன்ற மடையனே!

இந்த உலகில் அனைவரும் பாவிகள் தான்!  நீ பாவம் செய்ததால் தானே இங்கு பிறந்து பிறந்து இருக்கிறாய்?

பாவிகளே மனந்திரும்புங்கள் என ஏசு பெருமான் நூற்றுக்கு நூறு உண்மையான செய்தியை கூறியிருக்கிறார்!

ஏ மனிதனே, பாவியே உன் பாவம் தொலைய
இறைவன் திருவடியை சரணடை! அது உன்கண் தான் என்பதை அறி!
குருவழி தீட்சை பெறு!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்.

சனி, 3 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 8

அவனே
உலகில் ஆண்மகன்
நாமெல்லாம் பெண்பிள்ளையே

பிள்ளையே
இறைவனுக்கு எல்லோருமே
அவனிடம் கிடையாது பேதம்

பேதம்
நீங்கினால் பேரின்பம்
அபோதனாய் ஆனந்தமாய் வாழலாம்

வாழலாம்
சன்மார்க்க நெறியிலே
சித்தியெல்லாம் கிட்டிடும் நமக்கே

நமக்கே
நாயகனாவான் நம்பிரானே
நம்பினோர் கெடுவதில்லை நாதனை

நாதனை
நாமுய்ய நாடனுமே
கண்ணின் மணியில் கலந்தவனை

கலந்தவனை
கலந்தாலே மணமே
பஞ்சபூதமும் ஒன்றான பொருளே


பொருளே
மெய்ப்பொருளே கண்ணே
மணியே மூலமே முதலே

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!

பொய்யனேன் அகம்நெகக் புகுந்தமு தூறும்
புதும லர்கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக்  கருத்தினை இழந்தேன்

நாம் எப்படி இருக்கக் கூடாது என மாணிக்க வாசக பெருமான் நமக்கு
அறிவுறுத்துகிறார்! பொய் பேசக்கூடாது! நாம் உள்ளம் உருக
புத்தமுதூறும் புதுமலர் கழல் - கண்மலராகிய இறைவனின்
திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!
நாம் விழித்திரிக்கின்றோம் என்று என்னி உள்ளத்தில் நிலை
நிறுத்த வேண்டிய கருத்தை இழக்காமல், உண்மையில்
உன் மெய்யில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!
இறைவன் திருவடியை நினைக்காத நீ சாவாய்!
சந்தேகமில்லை!

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 7


நில்லே
மனதை நிலை நிறுத்தியே
மணியில் ஊன்றி இருப்பாயே

இருப்பாயே
சும்மா சொல்லற
பசித்து தனித்து விழித்தே

விழித்தே
விமலனை காணலாம்
சங்கற்ப விகற்பங்கள் அற்றால்

அற்றால்
ஏழு திரைகள்
தீப ஒளி காணுமே

காணுமே
கண்கள் வழியாகவே
கடத்தல் புகும் வாசலே

 வாசலே
தொடுவீர் மனதாலே
கண்ணின் மணியை எண்ணுவீர்

எண்ணுவீர்
நினைத்து உணர்ந்து
காணலாம் ஒளியை பலவாய்

பலவாய்
சிந்தையை விடாதீர்
சோதியே கடவுள் அம்சம்

 அம்சம்
எப்போதும் இருப்பீர்
எந்நேரமும் காப்பானே அவனே

#ஞானசற்குரு

Popular Posts