14. திருவுந்தியார்
சிவபெருமானின் திருவிளையாடல்களை, பிரதாபங்களை கூறி பாடியாடும் மகிழ்ந்தாடும் பாடல்கள்! இங்கும் ஞான நிலைகளே மறைவாக சொல்லப்படுகிறது!
“வளைத்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற”
வில் வளைந்தாலே அம்பு எய்த முடியும்?! வில்லிலே அம்பை வைத்து எப்படி விடுவார்கள்? வில்லிலே கட்டப்பட்ட நாண் - கயிற்றை பின்னாலே இழுப்பர்! அப்போதுதான் அம்பு விடும்போது முன்னால் வேகமாக போகும்! அதுபோல நம் இரு கண் நாண். உள்ளே மத்தியில் அக்னி கலையில் சேரும்போது சக்தியுடன் அம்புபோல நடுவிலிருந்து ஒளி பாயும்! சிவபெருமான் இப்படி வில்லை வளைத்தால் விளையும் பூசல் என்கிறார்! கண்மலர் ஒளியால் ஒளி மிகுவதால் விளையும்! சல்லென பாயும் ஒளியால் முன் நிற்கும் முப்புரம் - மும்மலத்திரை எரிந்து போகும்! இதுதான் ஞானம்! இதற்கு எது காரணம்? உந்தீபற உன் - தீ - பற்றி எரிந்து பறந்து வந்து மும்மலத்திரையை எரிக்கணும்! எல்லாமே வெந்து சாம்பலாகணும் மும்மலம் அற்றாலே பிறவிப்பிணி நீங்கும்!
“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற”
முப்புரம் எரித்த சிவன் கையில் இரண்டு அம்பு இல்லை! ஏகம்பமாய் ஒரே - நீண்ட - கம்பம் போன்று ஒளி பெருகியவனாய் இருக்கும் சிவம் தன் கையில் ஒரு அம்பே வைத்துள்ளார்! நம் இரு கண்களே வில்! உள் அக்னிகலையே வில் நாணை பின் இழுத்து சேர்க்கும் இடம்! நாண் பின் குவியும் இடம்! அந்த ஓர் அம்பே, ஓரம்பே முப்புரம் எரித்தது! சிவன் புன்னகைத்தார்! என்பது கண்மணி வாய் திறந்தது ஒளி பிறந்தது மலம் எரிந்தது ஞான அனுபவமே!
“பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனை”
பார்ப்பதி - பார்ப்பது எது கண்தானே! அந்த கண்ணின் பதி - தலைவன் கண்ணிலே பதிந்திருப்பவன் சிவம்தானே! ஒளிதானே! அந்த சிவத்தை பகைத்த தக்கனை அழித்தார் சிவமே! சிவத்தை தூஷித்த தக்கன் சிவத்தாலேயே அழிந்தான்! நாம் சாப்பிடும் ஆகாரம் சத்தாகி அவிப்பாகமாகி நம் ஆவியோடு சிவத்தோடு சேரும்! இல்லையேல் நாம் சவம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக