"அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்"
அம்பலம் என்றால் கோயில் என்றொருபொருள்! அம்பலம் ஆகிவிட்டது - வெளிப்பட்டுவிட்டது என்றால் இதுவரை இரகசியமானதாக சொன்னது எல்லோரும் அறிய வெளிப்பட்டுவிட்டது என்பது மற்றொரு பொருள்!
நமது உடலே கோயிலாக கொண்ட அம்பலவாணன் நமது கண்களிலே எல்லோரும் பார்க்கும்படியாகவே, நாம் இந்த உலகத்தையே பார்க்கின்ற கருவியாகவே கண்மணி ஒளியாகவே ஆடிக் கொண்டிருக்கின்றான்!
கண்ணே - மெய்ப்பொருள்! கண்ணிலே மணியிலே பிணைந்திருக்கிறான் புணையாளன் - ஒளி - சிவம்! அம்பலத்திலே ஆடுகிறான்!
"ஆனந்தத் தேனிருந்த பொந்தை பரவி"
நம் கண் கருவிழிக்குள் மரத்திலுள்ள பொந்து போல் பாறைகளுக்கிடையே உள்ள குகை போல உள்ளே சிவத்தையடைய பாதை உள்ளது! முன்பாக கண்மணி உள்ளது! ஞானதவம் செய்வோர் கண்மணியில் நினைவை நிறுத்தி உணர்ந்து விழித்திருந்தால் பொந்தின் உள்ளே ஒளி போகும்!
“அக்கினிகுஞ்சொன்று கண்டேன் ஆங்கே மரப்பொாந்திடை வைத்தாய்” என்று மகாகவி பாரதி பாடி மகிழ்ந்ததும் ஞானநிலையே! பாரதியைப் பற்றி ஆகா ஓஹோ என்று வாய்கிழிய பேசுவார் பலர்! அன்று உண்ண உணவின்றி வறுமையில் வாடினார்! பட்டினியால் செத்தான் பாரதி!
நோவாலே மடிந்திட்டான் புத்தன்,
சிலுவையிலே அடியுண்டு இயேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பார் புகழும் இராமனுமேயாற்றில் வீழ்ந்தான்
நான் பார் மீது சாகாதிருப்பேன் பாரீர் என்ற பாரதி பட்டினியால் செத்தான்!
மகா கேவலம்! அன்று பாரதியை ஆதரிக்க நாதியில்லை! செத்தபின் மணிமண்டபம் கட்டி போற்றுகிறது உலகம்?!
கேடு கெட்ட மனிதர் நிறைந்த உலகமடா இது! பாரதியை போல ஞானசாதனையாளர்கள் பட்டினியால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலார் தர்மச் சாலையை ஏற்படுத்தி உணவு வழங்கினார்!
வசதி படைத்தவர்கள் வக்கணையாக இருந்து சாப்பிடுவதற்கு கட்டப்பட்டதல்ல தர்மச்சாலை! புரிந்து கொள்ளுங்கள்!
அந்த பொந்துவழியே உட்போனால்தான் ஆனந்ததேன் கிட்டும்! தருவதற்கு வாலைத்தாயிருக்கிறாள்!
அடியேன் பட்டினியால் பரிதவிக்கக் கூடாது என்பதற்காகவே வாலைத் தாய், பல சீடர்கள் மூலமாக காணிக்கை தந்து காக்கிறாள்!
சீடர்கள் பிச்சையில்தான் இந்த சிவசெல்வராஜ் வாழ்கிறேன்! மனநிறைவோடு ஆன்மீக பணி செய்கிறேன்! சீடர்கள் உதவி யான் மெய்ஞ்ஞான நூல்கள் எழுதி வெளியிடுகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக