13. திருப்பூவல்லி
திருவாகிய இறைவன் தங்கிய கண்மலரில் உள்ள அல்லி - பூவில் உள்உள்ள, நடுவிலுள்ள பகுதி கண்மணி - அதுவே திருப்பூவல்லி என்றார் மணிவாசகர்! தாமரைப்பூவின் உள்ளே உள்ள தாமரை மணி உள்ள அல்லி! அதுபோலவே கண்ணே தாமரையாகவும் மணியே அல்லியாகவும் கூறப்படுகிறது ஞானத்தில்!
இணையாக இரு திருவடித்தாமரையை என் சிரசில் கண்களாய் இறைவன் அருளி ஞானோபதேசம் ஞானதீட்சை அருளியதால் இந்த பிறவியே இரட்சைபட்டது!“இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்”
அதுவரை துணையாக இருந்த சுற்றங்கள் நண்பர்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் போய் தொலைந்தனர்! அப்பாடா நிம்மதி கிட்டியது! மாணிக்கவாசகர் சுற்றத்தை துறந்து துறவியானார் என்கிறார்! அடியேன் துறக்கவில்லை! சுற்றத்தார் சொந்தபந்தம் நண்பர்கள் அன்பர்கள் அனைவரும் என்னை துறந்தனர்? நான் தனியாக விடப்பட்டேன்!
அப்போதுதான் பட்டினத்தார் கூறிய, “சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீரொட்டமன்றேஇரு” என்பதன் உண்மை உணர்ந்தேன்! இறைவா நீயே கதி! என்ற நிலைக்கு என்னை எங்குரு தள்ளி எனக்கு இறைவன் வாலை அருள்பெற வழிவகை செய்தார்கள்!!? நான் யாரையும் வெறுக்கவில்லை! எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர்! “நாமாக தள்ளவில்லை!
தன் பொல்லாங்கை கருதி தாமாகவல்லோ போய்விட்டார்கள்” என்ற சித்தர் பாடலே உண்மையாயிற்று! “அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல” தண்ணீர் வற்றிய குளத்தில் பறவைகள் கூட வராது அதுபோல செல்வம் இழந்து துன்பப்பட்ட இந்த செல்லவத்தை எல்லோரும் ஒதுக்கித் தள்ளினர்!
இறைவன் அன்போடு சேர்த்துக் கொண்டார்! இது என் வாழ்வில் நடந்த உண்மை! இன்று நல்லாயிருக்கும்போது சொந்தபந்தங்கள் நண்பர்கள் அன்று பேசக்கூட விரும்பாதவர்கள் தேடி வருகிறார்கள்! வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் தஞ்சம் நீ எனக்கு சாமி என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் என்று வள்ளலார் சொன்னபடி அன்று என்னை திட்டியவரெல்லாம் இன்று நாடி வருகிறார்கள்! இறைவா எல்லாம் உன் லீலை!!
யாருமே உதவிக்கு இல்லையே என நடுத்தெருவில் குடும்பத்தோடு கலங்கி நின்றபோது நானிருக்கிறேன் என்று கன்னியாகுமரி வாலைத்தாய் கூப்பிட்டு அருள்புரிந்தாள்! காத்தாள்! வாழ வைத்தாள்! இன்றும் படிஅளக்கிறாள்! தாயல்லவா? கருணையின் வடிவம்! அன்பின் - இரக்கத்தின் இருப்பிடமே தாயல்லவா? துன்பத்தால் வேதனையால் துடிதுடித்த என்னை காத்தருளினாள்!! உறுதியான நம்பிக்கை!
விடாப்பிடியான - வைராக்கியமான தவம்! வள்ளலாரின் - குருபிரானின் அன்பு என்னை காத்தது! திருவாசகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் கூறுவது தன் அனுபவமே! அதுவே தவம் செய்வோர் எல்லோரது அனுபவமும் ஆகும்! இப்படியெல்லாம் வரும் - நடக்கும், கலங்காதே!
உறுதியாக இறைவன் திருவடியை பற்றி்க்கொள், விடாதே! என நமக்கு கூறுகிறார்கள்! அந்தந்த அனுபவம் பெற்றவர்களுக்கு ஞானப்பாதையில் முன்னேற ஊக்கமும் கிட்டும்! அதை நமக்கு தரவே ஞானநூல்களை நமக்குத் தந்தனர் ஞானியர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக