திங்கள், 11 ஜூன், 2012

இறைவன் திருவடி கண்மணியே


" மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த  
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே"

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல்
இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்!

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை!
மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல!


மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே
ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.


இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்!

"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நாந் தொழு ந் தெய்வமே"

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில்
ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும்
மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும்
எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்
தாயுமான சுவாமிகள்.

காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்'
என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

 சனாதன தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

3 கருத்துகள்:

Popular Posts