சனி, 3 ஜனவரி, 2026

அகத்தியர் மெய்ஞான சூத்திரம் - திருவடி



அகத்தியர் மெய்ஞான சூத்திரம்

"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்று "

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் ! கண்ணில் நின்ற ஒளிபாரு! இதுவே ஞான தவம்! 

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து 
கண்மணி நடுவே ஊசி முனை வாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு! 
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப் போகும் ! 

இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் - உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் ! 
இதை விண்ணில் நின்று , எல்லாமே வெட்டவெளி தான் என உணர்ந்து அங்கிருந்து 
உபதேசம் தீட்சை செய்த குருவை போற்று! 

உன் ஞான சற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டு செய் ! 

"குருவினடி பணிந்து கூடுவதல்லாங்கு அருவமாய் நிற்கும் சிவம் " என்கிறது ஒளவைக் குறள்! 

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார்?! 
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் இருப்பது கொடும் பாவமல்லவா? 
குருவைப் பணி! குரு பார்க்க கோடி வினை தீரும்!

நம் மனம் ஒருங்கினால் நாதவிந்து சொரூபம் காணலாம்! 
பஞ்சபூதங்களாலான நம் இரு கண் தான் 
நம் மனம் உதிக்கும் இடம் ஒடுக்கும் இடம்! 

சாதாரண மனிதருக்கு கண் பார்த்து மனம் எண்ணம் உதயத்தால் கர்மவினை நடக்கும் ! 
ஆத்ம சாதகன் எங்கே உதயமாகிறதோ? அங்கேயே கண்ணில் - பார்ப்பதால் உருவாகும் மனதை அதே கண் ஒளியில் வைப்பதால் நினைப்பதால் ஒடுக்கி விடலாம்! மனம் அடங்கும் ஒரே இடம் நம் கண்ணே ! 

" மனமடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்" என்றார் ஒரு ஞானி! 

நம் கண்ணில் தான் ஜீவ ஒளி - பரமாத்மாவின் அம்சமான பேரொளி நிறு ஒளியாக துலங்குகிறது. இறைவன் இருக்கும் துலங்கும் இறைவன் திருவடிகளில் நம் மனதை வைத்தால் மட்டுமே இறைவன் திருவடியில் மட்டும் நம் மனம் அடங்கும் ஒருங்கும் !? வேறு எங்கும் யாராலும் அடக்கவோ ஒடுக்கவோ முடியவே முடியாது!!

அக்கினி ஆதித்தன் சந்திரன் கலந்து ஒன்றாய் நின்றதுவே பூரணமாம்! அதுவே வாலையாம்! இதை அறிபவனே புண்ணியவானாம்! இதை சொல்பவனே ஞானசற்குருவாம்! நம் சிரசே ஆயிரத்தெட்டிதழ் தாமரையாம்! அதிலிருந்து உள் பாய்வதே அமுதமாம்! அமுதம் உண்டவன் சாகமாட்டான்! அவனே சிவயோகி ! ஞானி ! சீவனை சிவனாக்கிய சித்தன்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் - ஞானம் பெற விழி
பக்கம் - 140
குருவே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts