வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கண் காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்

 "கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
 கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"

திருமந்திரம் - பாடல் - 2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்! 

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! 

அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! 

மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

                              🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா🔥

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts