" நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க "
இறைவனை வாழ்த்தி நமச்சிவாய வாழ்க என்றும், நமச்சிவாயா
என்னிடம் வா! என்னை நீ அள்ளுக - அள்ளிக்கொள் - சேர்த்துக்கொள்
என்பதனையே வாஅழ்க என்றது மணிவாசகம்!
இறைவனே எவ்வுயிர்க்கும் நாதன் - தலைவன். அந்த நாதனுடைய
தாள் திருவடி - மெய்ப்பொருள் - நம் கண்கள். நம் கண்களே நம் நாதனாம்
இறைவனின் திருவடி அது வாழ்க என்றது மணிவாசகம்!
இறைவன் இமைப்பொழுதும் நீங்காமல் என் நெஞ்சில் - நெஞ்சு
என்பது ஐஞ்சும் சேர்ந்த இடம்! அதாவது ஐம்பூதமும் ஒத்த இருக்கும்
இடம்! நமது கண்ணிலே தான் இருக்கிறது. கண்ணையே நெஞ்சு என்பதே
மணிவாசகம்! அப்படி சதா சர்வ காலமும் என் நெஞ்சிலே, என் கண்ணிலே,
மணியிலே ஒளியாக ஒளிரும் தாள் - திருவடி வாழ்க!
" கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க "
கோகழி - பெரிய உப்பு ஆறு. அதாவது கழிமுகம் என்போமல்லவா?
அதாவது ஆறு கடலில் கலக்கும் இடம்! இங்கே பெரிய கழிமுகமாக நமது
கண்ணே விளங்குகிறது! கண்ணீர் உப்புதானே! கோ என்றால் இறைவன்
- தலைவன்! இறைவன் உள்ளே இருக்கிறார் அதன் அருகே கழிமுகம்!
கடலாகிய இறைவனின் முன் உள்ள, ஆறு கடலில் கலக்குமிடம் கழிமுகம்!
அதனை ஆண்டு கொண்டிருப்பவன் தான் குருவானவன் அதுவே நம் மணி
கண்மணி அதுவே இறைவன் திருவடி அது வாழ்க என்பதே மணிவாசகம்.
" ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க "
ஆகமம் எல்லாம் - வேதங்கள் ஆகமங்கள் புராண இதிகாசங்கள் எல்லாம் சொல்வது இறைவனைப் பற்றித்தானே! எல்லா ஆகமப் பொருளுமாகி நிற்பவன் இறைவனே! அவன் வேறு எங்கோ தூரத்தில் இல்லை! நமக்கு வெகு அண்மையில்தான்! நம் உடலிலே கண்ணிலே மணியோடு ஒளியாகத்தான் துலங்குகிறான் அதுவே இறைவன் திருவடி! வாழ்க! என்கிறது மணிவாசகம்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக