ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

குரு, குரு ஆனது

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை அருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன் செயலோ அறியேன்
மனம் ஆலை பாய்வது கண் மன்றில் நடத் தரசே.



ஞானம் தெரிந்தவர் கூட முழுமையாக வில்லை! உணர்ந்தாரில்லை!
ஆனால் அடியேன் குருவருளால் திருவடிஞானம் அறிந்து உணர்ந்தேன்!
ஞானம் அனுபவம் பெற்றேன். யாருக்கும் தெரியாமால் சிவனே என்று
நாம் இருப்போமே என்றிருந்தேன்! ஆனால் எல்லோரும் அறிய ஞானம்
அறிந்தவன் இவன் என என்னை தெருவில் இழுத்து விட்டுவிட்டனர்.
இது இறைவன் அருட்செயலோ அல்லது மாயை விளையாடுகிறதோ அறியேன்! என்மனம் அலைபாய்கிறது என்கண்மணி நடராசா அருள்புரிவாயாக!

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க  சுவாமிகள் தன் அனுபவத்தை இப்பாமாலையில் உரைத்தார்! இதுவே அடியேனுக்கு அனுபவமாயிற்று! எங்குரு ஜோதி இராமசாமிதேசிகர் அவர்களிடம் தீட்சை பெற்று சாதனை செய்து கண்மணி மாலையும் வெளியிட்டு சும்மா இருந்துவிட்டேன். எங்குரு ஜீவ சமாதி கொள்ளுமுன் கடைசியாக எம்மை அழைத்து தனக்குப்பின் குருவாக இருக்க பணித்தார்கள். நான் மறுத்தேன். நீண்ட நேரம் பேசி பல
காரணங்களும் கூறிய பின் குரு வற்புறுத்தவே அடியேன் குருவாக சம்மதித்தேன்! குருவும் சமாதி ஆகிவிட்டார்! நான் நமக்கு வேண்டாமடா சாமி இந்த குருபட்டம் என ஒதுங்கி விட்டேன்!

ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வலிந்து
என்னை ஆட்கொண்டு எங்குரு சமாதி ஆகி 12  வருடங்கள் கழித்து என்னை
குரு பீடத்தில் அமர்த்திவிட்டார்?! கன்னியாகுமரியில் "சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்" ஞான சற்குருவாக இருந்து திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்க அருள்பாலித்தார்! "தங்க ஜோதி ஞான சபை" உருவாக்கி தங்கஜோதியான நம் உள்ஒளியை, பேரொளியான இறைவனை காண எல்லோருக்கும் அருட்குருவாக இருந்து ஞானம் வழங்க அடியேனை
பணித்துள்ளார்! வள்ளல் பணியை ஆக்ஞையை(ஆணை) சிரமேற்கொண்டு அடியேன் பணி புரிகிறேன்! இது வள்ளல் பெருமான் அருட்செயலே!

திருவருட் பாமாலை நாலஞ்சாறு - பக்கம் 132
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

1 கருத்து:

  1. அன்பு நண்பரே,
    தங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது .மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு

Popular Posts