ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

சற்குரு கோவிந்த சுவாமிகள்



சற்குரு கோவிந்த சுவாமிகள்
மரணமிலா பெருவாழ்வு பெற்ற ஞானிகள், சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம்!
ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம்!
இந்தியாவின் பெருமையே இதுதான்!
இந்த ஆன்மீக பூமியில் பிறந்த நாம் மிகவும் புண்ணியசாலிகள்! இறையருள் பெற்றவர்கள்!
அடியேன் பூவுடல் எடுத்த 24 ஆண்டில் திருவடியை சரணடையும் பேறுபெற்றேன்.
எந்தன் வாழ்விலும் அருள்கூட்டிய ஞானிகள் பலர்! வழிகாட்டியோர் பலர்!
"உலகே மாயம் வாழ்வே மாயம்" என எனக்கு உணர்த்தி என்னை நெறிப்படுத்திய மாகுரு சித்தர் பெருமகனார்தான் கோவிந்த சுவாமிகள்!
கன்னியாகுமரிக்கு என்னை அழைத்தது வாலை கன்னியாகுமரி அம்பாள் அருள் பெறச் செய்தது, கன்னியாகுமரியிலே இருக்கச் செய்தது, குருபீடத்தில் அமர்த்தியது எல்லாம் வல்லவரான சற்குரு கோவிந்த சுவாமிகளே! அவரின் ஒப்பற்ற அருளாசியே!
பல ஞானிகள் இன்றும் கூடவே இருந்து எம்மை வழிநடத்துகிறார்கள்!
கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழிகாட்டியதால்தான் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழிகாட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார்!
சூட்சும நிலையில் இருந்து ஆன்மீக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவது ஒன்றே அவர்தம் ஒப்பற்ற பணி!
இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழிகாட்டிய தெய்வம் சற்குரு. தேடுகிறேன்! காட்சி தருவாயா? சற்குருவே! எங்கும் இருப்பார்! யாருக்கும் அருள்வார்! அவர்தம் புகழ் பாடுவதே எமக்கு மகிழ்ச்சி.

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

மனிதனாகுக!?

 

மனிதனாகுக!?

உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா? மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா?

குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா?

பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு - பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?

மனிதன் என்பவன் யார்?

மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்! அதற்குத்தான் பகுத்தறிவு!

எப்படி பக்குவப்படுத்துவது?

இதைச் சொல்லித்தரும் குருவைத் தேடு!

நாம் சாகப்பிறக்கவில்லை!

வாழப்பிறந்திருக்கிறோம்!

எப்படி வாழ வேண்டும்?

பஞ்சமா பாதகங்கள் பொய் - கொலை - களவு - கள் - காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் - ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்!

மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே! உடலை கெடுக்காதே?

மது, புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே! நோய்க்கு இடங்கொடேல்!

எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையையே பேசு!

"ஒருவனுக்கு ஒருத்தி" என வாழ்!

மண், பெண், பொருள் ஆசையை விடு!

இறைவன் திருவடியில் சரண் புகு!?

அப்போதுதான் நீ மனிதனாவாய்!


- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

Popular Posts